கேப் விடாமல் கிடா வெட்டும் தம்பிதுரை.. பட்ஜெட்டிலும் பாஜகவுக்கு கொட்டு
Recommended Video
சென்னை: பாஜகவின் தமிழக விரோதப் போக்குகளை தொடர்ந்து கண்டித்து வரும் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளருமான தம்பி துரை நேற்று வெளியான நிதி நிலை அறிக்கை குறித்தும் பாஜகவை விமர்சித்துள்ளார்.
பாஜகவின் தமிழக விரோதப் போக்குகளை தொடர்ந்து கண்டித்து நாடாளுமன்றத்தி குரல் கொடுத்து வரும் தம்பி துரை மேக்கேதாட்டு விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், ஜி எஸ் டி போன்ற பல்வேறு மத்திய அரசின் நிலைப்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் விமர்சித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜக நேற்று வெளியிட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையையும் விமர்சித்துள்ளார். அதிமுக தலைமை பாஜகவின் நேற்றைய பட்ஜெட்டை வரவேற்றுள்ள நிலையில் இவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார இட ஒதுக்கீட்டில் சலுகை பெற ஆண்டு வருமானம் 8 லட்சம் என்று நிர்ணயித்த அரசு வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பை 5லட்சமாக நிர்ணயித்தது ஏன் என்றும் வருமான வரிக்கான உச்ச வரம்பையும் 8 லட்சம் என்று அறிவிக்காதது ஏன் என்றும் கேள்வி விடுத்துள்ளார். வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த பட்ஜெட்டில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தம்பிதுரை குறை கூறினார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில சலுகைகளை வரவேற்ற அவர் தன்னுடைய கரூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் தன்னுடைய தொகுதி மேம்படவில்லை என்று கூறியவர் கொசுவலை உற்பத்தி தொழிலும் ஆடை தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ள 6000ரூபாய் போதாது என்று குறை கூறியவர் அதை 12000 ரூபாயாக வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய கஜா புயல் நிவாரண நிதி, ஜி எஸ் டி நிதி உட்பட பல்வேறு தேவைகளுக்காக தரவேண்டிய 9000 கோடி நிதி இன்னமும் தரப்படாமல் உள்ளது என்றும் குறை கூறினார். மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்தவர் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி நேற்று வெளியான நிதி நிலை அறிக்கையை வரவேற்று பேசியிருக்கும் இந்த சூழலில் தம்பிதுரை நேற்றைய நிதி நிலை அறிக்கையை மட்டுமல்லாது கடந்த ஆண்டு வெளியான நிதி நிலை அறிக்கையையும் விமர்சித்தே பேசியிருந்தார். கடந்த ஆண்டு பெப்ருவரி 1-ம் தேதி வெளியான நிதி நிலை அறிக்கை குறித்து பேசியவர் மத்திய அரசு தமிழக திட்டங்களுக்கான நிதியை இதுவரை தரவில்லை, அதோடு போதுமான நிதி ஒதுக்கப்படவும் இல்லை என்று கூறியிருந்தார். ஒரே நாடு என்று பாஜக கூறுவதை அதிமுக எதிர்க்கும் என்றும் அனைத்து மொழிகளுக்கும் தேசிய மொழி என்ற அங்கீகாரம் வழங்கவேண்டும், அப்படி செய்யும் பட்சத்தில் தமிழிலும் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தம்பிதுரை பாஜகவின் நிதிநிலை அறிக்கையை விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது