'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி
Recommended Video
சென்னை: வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம் என்ற பதாகையை ஏந்தியபடி, தமிமுன் அன்சாரி எம்எல்ஏ இன்று சட்டசபை வருகை தந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள், கடந்த வெள்ளிக்கிழமை மாலை போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தடியடியாக மாறியது. இதைக் கண்டித்து, இரவோடு இரவாக பல இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்தது காவல்துறை. இருப்பினும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக போராாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்றும் போராட்டம் தொடருகிறது. சுமார் ஆயிரம் ஆண் மற்றும் பெண்கள், போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த நிலையில்தான்,
மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, இன்று சட்டசபை வருகை தந்தபோது, வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையுடன் வருகை தந்தார்.
மேலும், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேசுவதற்கு சபாநாயாகரிடம் கோரிக்கை சமர்ப்பித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படையின் எம்எல்ஏ கருணாசும், இதேபோன்ற கோரிக்கையை, சபாநாயகரிடம் வைத்துள்ளார்.