Exclusive: நான் கெஞ்சிக் கேட்கிறேன்; இப்போதும் காலம் இருக்கிறது; மன்றாடும் தமிமுன் அன்சாரி!
சென்னை: ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் சாதி, மதம் அடிப்படையில் பாரபட்சம் இருக்கக் கூடாது என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரின் கரத்தை பற்றி கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் மனம் திறந்து பேசிய அவர்;
ஆயுள் சிறைவாசிகள்
''ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதில் சாதி, மதம், வழக்குகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டவேண்டாம் என்பதை தான் கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட அதை கேட்கவில்லை. முஸ்லீம் ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் பல முறை நான் நேரில் விவரம் எடுத்துக்கூறியும் அவர்கள் எதையும் செய்யவில்லை.''
நீதியை நிலைநாட்டுக
''இந்தச் சூழலில் இஸ்லாமியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட கட்சி எனக் கருதப்படும் திமுக ஆட்சியிலாவது இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த ஆட்சியிலும் கடந்த அதிமுக ஆட்சியை போலவே முஸ்லீம் ஆயுள்சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இப்படி செய்வார் ஸ்டாலின் என துளியும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கருணையின் அடிப்படையில், மனிதாபிமான முறையில் முதலமைச்சர் நீதியை நிலை நாட்ட வேண்டும் என கோருகிறோம்.''
அழுதுவிடுவீர்கள்
''ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. இப்போது நினைத்தாலும் முதலமைச்சரால் அரசாணையில் மாற்றம் செய்ய முடியும். மனிதாபிமானமும், துணிச்சலும் மிக்கவர் ஸ்டாலின் என்பதால் அவரிடம் இதை எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி செய்த அதே தவறை ஸ்டாலினும் செய்துவிடக்கூடாது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களின் குடும்பங்களை பார்த்தால் நீங்களே அழுதுவிடுவீர்கள், அந்தளவுக்கு சிதைந்து வேதனையில் தவித்து வருகிறது.''
கெஞ்சிக் கேட்கிறேன்
''ஒன் இந்தியா தமிழ் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், உங்களின் இரு கரங்களை பற்றி இந்த தமிமுன் அன்சாரி கெஞ்சி மன்றாடிக் கேட்பதாக இதை எடுத்துக்கொண்டு முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.''