7 பேர் விடுதலை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு.. பேரவையிலிருந்து தனியரசு, தமிமுன் வெளிநடப்பு
சென்னை: பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் தாமதம் குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை உள்ளிட்டவைகளை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ தனியரசு, இந்திய முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 8-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பேரவை தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.
கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் மரணமடைந்த கருணாநிதி, வாஜ்பாய், பீஷ்ம நாராயண சிங், சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சட்டசபை கூடியது.
அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து பேசுவதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரியும், தனியரசுவும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் தாமதம் நியாயமா? நீதியா?
ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலையில் முஸ்லிம் கைதிகளுக்கு பாரபட்சமா? ஏன் அவர்களுக்கு விடுதலை இல்லை? என்ற கோரிக்கைகளை ஏந்தி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் உலகமெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகங்களை பிரதிபலிக்கிற இந்தியாவிலேயே அதிகப்படியான நாட்கள் அதாவது 27 ஆண்டுகள் சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி நீதிமன்றம் மூலம் விடுதலையை பெற்றும், 161-இன் கீழ் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி விடுதலையை உறுதி செய்தும் தமிழக ஆளுநர் தாமதப்படுத்துவதை விவாதிக்க அனுமதி கோரினோம்.
அது போல் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் வாடி வரும் இஸ்லாமியர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று வரும் இவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன் விடுதலை செய்வதாக அறிவித்தும் இன்னும் விடுதலை செய்யவில்லை. இது குறித்து விவாதிக்க கோரினோம். ஆனால் அதற்கு பேரவை தலைவர் அனுமதிக்கவில்லை.
அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றனர். அது போல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏ அபுபக்கர் கடையநல்லூர் தாலுக்கா பற்றி பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தார்.