தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாவம்.. முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வேதனை
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களுக்கு பெரும்பாலான இடங்களில் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
ஆன்லைன் வகுப்புகளை காரணம் கூறி பெற்றோரிடம் இருந்து கல்விக்கட்டணத்தை கறக்கும் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் பெருமக்களின் வாழ்வாதார நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;
கொரணா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் நூறு நாள் வேலை திட்டத்திற்கும், காய்கறி கடைகளுக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஆன்லைன் வகுப்புகளை இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் நடத்தும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்கள் 70 முதல் 90 சதவீதம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. இந்நிலையில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு ஊதியத்தை கூட பல தனியார் பள்ளிக்கூடங்களில் வழங்கப் படுவதில்லை என்ற செய்தி கவலையளிக்கிறது.
கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த விரைவில் அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம்
எனவே இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் கவனம் எடுத்து தனியார் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஊதியத்தை உரிய சதவீதத்தில் உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.