மக்களை மகிழ்விப்பவர்கள் மனம் நோகலாமா? சினிமா துறையினருக்காக தனி நபர் மசோதா தாக்கல் செய்த தமிழச்சி!
சென்னை: திரைப்படம் மற்றும் நாடக கலைஞர்களின் நலனுக்காக தனி நபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
நடிகர்கள், பின்னணிப் பாடகர்கள், புகைப்படக் கலைஞர்கள், எடிட்டர்கள், நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறப் பாடகர்கள், உள்ளிட்ட அனைவரும் பயனடையும் வகையில் கலைஞர்கள் நலநிதி அமைப்பு உருவாக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இதுதொடர்பாக மக்களவையில் அவர் தாக்கல் செய்துள்ள தனிநபர் மசோதாவின் விவரம் பின்வருமாறு;
திரைப்படம்
திரைப்படத் தயாரிப்பிலும், நாடகத் துறையிலும் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஏராளமான இன்னல்களுக்கு அவர்கள் உள்ளாகின்றனர். மக்களை மகிழ்விக்கும் மகத்தான பணியை மேற்கொண்டு வரும் அவர்கள் தங்களுடைய பணியில் மிகுந்த இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை இருந்து வருகிறது.
உத்தரவாதம் இல்லை
திரைப்படத் தயாரிப்பின் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், அதன் காரணமாக அவர்கள் காயமடையவும் நேரிடுகிறது, அவ்வாறு காயமடைந்து பாதிப்பு அடையும் போதும், உயிரிழக்க நேரிடும் போதும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சொற்ப அளவுக்கே இழப்பீட்டு தொகை கிடைத்து வருகிறது. மேலும், அவர்களுக்கு மருத்துவ வசதியோ, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதியோ போதிய அளவில் இல்லை.
நிரந்தர வேலையில்லை
அதுமட்டுமின்றி இப்பணியில் அவர்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை, மாதத்தில் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைத்து வருகிறது. இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர், திரைப்படத் துறையின் மூலம் நமது நாட்டிற்கு ஏராளமான வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், இத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நல்வாழ்விற்கு அரசு எவ்விதமான நன்மையும் செய்யவில்லை.
கல்வி வசதி
எனவே திரைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திரைப்படக் கலைஞர்கள் நல்வாழ்வு நிதியை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு விபத்து காப்பீடு வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். திரைப்படக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.
கலைஞர்கள் நலநிதி
திரைப்படம் மற்றும் நாடகத் துறையில் ஈடுபட்டுள்ள நடிகர்கள், பின்னணிப் பாடகர்கள், தயாரிப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், எடிட்டர்கள், விநியோகஸ்தர்கள், நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறப் பாடகர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடையும் வகையில் இந்த கலைஞர்கள் நலநிதி அமைப்பு பேருதவியாக இருக்கும் என இந்த மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.