கருணாநிதியை நன்றியுடன் நினைவு கூறுக... உச்சநீதிமன்ற தீர்ப்பு மணிமகுடத்தில் ஒரு மாணிக்ககல் -தமிழச்சி
சென்னை: சொத்துப்பங்கீட்டில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மணிமகுடத்தில் ஒரு மாணிக்க கல்லை போன்றது என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை இந்தியாவிலேயே முதல்முறை நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி என்றும் அவரை நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய தருணம் இது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட கருத்தின் விவரம் பின்வருமாறு;
தமிழகத்தில் கொரோனாவால் 10 நாளில் 1000 பேர் பலி.. குமரி, கோவை, உள்பட 15 மாவட்டங்களில் கிடுகிடு
பெரியார் மாநாடு
''திராவிடத்தால் வீழ்ந்தோம் எனக் கூறுபவர்களுக்கு திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது இந்த தீர்ப்பு. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது, மகிழ்ச்சி அளிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன் பெண்களுக்கும் சொத்துக்களில் பங்குண்டு என்பதை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். இதற்கான விதை எங்கிருந்து முளைத்தது எனப் பார்த்தோம் என்றால் பெரியார் நடத்திய செங்கல்பட்டு மாநாடு''
வரலாற்று சிறப்புமிக்க
''அந்த மாநாட்டில் தான் பெண்களுக்கும் சொத்துக்களில் சம உரிமை வழங்கவேண்டும், ஆரம்பக்கல்வி பள்ளிக்களில் பெண்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. பெரியாரின் கனவுகளை, லட்சியங்களை செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றியவர் கலைஞர். உச்சநீதிமன்றம் நேற்று வழங்கி தீர்ப்பை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் கலைஞர். ஆகையால் இந்த தருணத்தில் அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்''.
பெண்கல்வி
''ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சொத்துரிமை என்பதை சாதாரணமாக கடந்துவிட முடியாது. இது ஒரு மிகப்பெரிய மைல்கல். பெண்கள் முன்னேற்றத்திற்கும், பெண் உரிமைக்கும் தமிழகத்தில் அடித்தளம் அமைத்தவர் கலைஞர். இன்று புதிய கல்விக் கொள்கை என்கிறார்களே, அதில் பெண் கல்வி குறித்து எதுவும் இல்லை. ஆனால், பெண் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை இடைநிற்றல் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர்''.
மாணிக்கக் கல்
''அந்தவகையில் பெண் உரிமை விவகாரத்தில் தமிழகம் நாட்டிற்கே முன் மாதிரி மாநிலம் என்பதை நாம் தலை நிமிர்ந்து சொல்லலாம். பெரியார் இயற்றிய தீர்மானத்திற்கும், கலைஞர் நடைமுறைப்படுத்திய சட்டத்திற்கும் நேற்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இதனை மணிமகுடத்தில் ஒரு மாணிக்கக் கல் எனப் பார்க்கிறேன்.''