டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக் கூடாது... நிதின் கட்கரிக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.கடிதம்
சென்னை: நாடு முழுவதும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் டோல்கேட்கள் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கடந்த 25 நாட்களுக்கு மேலாக டோல்கேட்களில் சுங்க கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இதனிடையே வரும் 20-ம் தேதி முதல் மீண்டும் டோல்கேட்களை வழக்கம்போல் இயக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ள நிலையில் அதனை கடுமையாக எதிர்த்துள்ளார் திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிப்பது விலைவாசியை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் என்றும், டோல்கேட்களை திறக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
"டெல்லி போனீங்களா.. உங்க ஆளுங்களாலதான் கொரோனா பரவுது" சிகிச்சை தர மறுத்த டாக்டர்.. கர்ப்பிணி கண்ணீர்
லாக்டவுனால் மிக அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள துறைகளில் போக்குவரத்து துறை முதலிடத்தில் இருப்பதாகவும், இது போன்ற நேரத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்வது மேலும் மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் மக்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.