திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி... இடத்தை உறுதிசெய்து கொண்ட வேல்முருகன்
சென்னை: கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மத்தியில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் ஜூரம் இப்போதே வந்துவிட்டது.
வலிமையான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திமுக, அதிமுக, ஆகிய இரு பெரும் கட்சிகளும் தீவிரமாக வியூகங்கள் வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டன.
இதனிடையே திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைத்து பாமகவுக்கு பதிலடி கொடுப்பதற்கான திட்டத்தில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மாவட்டத்திற்கு 2 குழு அமைப்பு.. இனி உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு
கூட்டணி கட்சிகள்
தமிழக அரசியல் களத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கிவிட்டது. அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் தேர்தலில் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை ரஜினி கட்சி தொடங்கினால் கூட்டணி விவகாரங்களில் மேலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாமகவுக்கு பதிலடி
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக -காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். குறிப்பாக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சீண்டும் வகையில் பல கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்தார் . மேலும், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் வாக்குசேகரித்தார்.
நமது அணி
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய நிலையில், அப்போது அறிவாலயத்திற்கு சென்று ஸ்டாலினை சந்தித்தார் வேல்முருகன். சட்டமன்றத் தேர்தலில் நமது அணியில் தான் இருப்பீர்கள், உங்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படும் என உறுதியளித்து வேல்முருகனை அனுப்பி வைத்தார். இதனிடையே ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிப்படி திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணைவது இப்போது உறுதியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம்
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தொகுதியை மீண்டும் எதிர்பார்க்கிறார் வேல்முருகன். மேலும், தனக்கு மட்டுமல்லாமல் தனது கட்சிக்காக மேலும் 2 இடங்களை அவர் எதிர்நோக்கியுள்ளார். எப்படியும் பொங்கல் பண்டிக்கைக்குள் கூட்டணியை இறுதி செய்து தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.