டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது... போராட்டம் நடத்த தயங்கமாட்டேன் -வேல்முருகன் சீற்றம்
சென்னை: கொரோனா நெருக்கடி தீரும் வரை டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், மீறி வசூலித்தால் மக்கள் திரள் போராட்டம் நடத்த தயங்கமாட்டேன் எனவும் எச்சரித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கும் முடிவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சுங்கக்கட்டணம்
மோடி அரசோ கார்ப்பொரேட்டுகளுக்கான அரசு மட்டுமே! உழைக்கும் மக்கள் அதற்குப் பொருட்டே அல்ல. இதற்கு அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளே சாட்சி! இப்பொது இந்தக் கொரோனா நெருக்கடியிலும் படுகொடூரமான பாதக நடவடிக்கை ஒன்றை எடுத்திருக்கிறார். அதாவது, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 20) முதல் கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் உத்தரவிட்டிருக்கிறார்.
மோடி முடிவு
இந்த நேரத்தில் பல மாநிலங்களில் ஊரடங்கு மே 7ந் தேதி வரை கூட இருக்கிறது. அப்படியிருந்தும் ஊரடங்கு தளர்வு என்று மோடி அறிவிக்கிறார் என்றால், ஏற்கனவே மாநிலங்களுக்கு அவர் தர வேண்டிய நிதிப் பாக்கியைக் கூட தராதது மட்டுமல்ல; இனிமேல் கொரோனாவுக்கான நிதியோ, பாதுகாப்பு மற்றும் பரிசோதனைக் கருவிகளோ கூட எதுவும் தேவைப்படாது; அப்படித் தேவைப்பட்டாலும் மாநிலங்களுக்கு அவற்றைத் தருவதில்லை என்றே மோடி முடிவெடுத்துவிட்டார் போலும்.
விலை வாசி உயரும்
இந்த ஊரடங்கு காலத்தில் அடித்தட்டு மக்கள், அன்றாடங்காய்ச்சிகள் மற்றும் வீடு-வேலை அற்றவர்களுக்கு உணவே இல்லை. நடுத்தர மக்களுக்கும் கூட பற்றாக்குறை நிலையே. இந்த தருணத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்குத்தான் தேவை அதிகம். அவைதானே உணவுக்கான பொருள்கள்? லாரிகளும் அந்தப் பொருள்களைத்தான் ஏற்றிச் செல்லும். அப்படிச் செல்கையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் அழ வேண்டும் என்றால், அந்தச் சுமை அவை ஏற்றிச் செல்லும் பொருளின் மீதுதானே ஏறும். அப்போது பொருள்களின் விலை தாறுமாறாகாமல் வேறென்ன செய்யும்?
சட்டம் ஒழுங்கு
இதனால் பாதிக்கப்படுபவர் சோற்றுக்கின்றி வாடும் சாதாரண மக்கள் மட்டுமா? சிறு வியாபாரிகள், லாரி ஓனர்கள், லாரிகளில் வேலை செய்யும் தொழிளாளர்கள் எல்லோரும்தானே? இதனால் சமூக விலகல் கலகலத்து சமூகம் ஒன்றிணைந்து இதனை எதிர்க்கும் சூழல் உருவாகி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்.
பிரதமரின் கவலையே கார்ப்பொரேட்டுகளைப் பற்றித்தான்; அதனால்தான் சுங்கச்சாவடிகளில் ரூ.30 வரை கட்டணத்தை உயர்த்தி வசூலித்துக்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார்!