குறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்
சென்னை: குறைவான பயணிகள் வருவதாலும் வருமானம் குறைவு என்பதாலும் நாடு முழுவதும் 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது என்ற முடிவு கடும் கணடனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் நடைபெறுவது தனியார் வணிக நிறுவனமா அல்லது மோடி தலைமையிலான அரசா என அவர் வினா எழுப்பியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது;
EIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான "இஐஏ வரைவு".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்? முழு பின்னணி!
மக்கள் யார்?
அரசு என்பது என்ன? பெரும்பான்மை மக்களின் அமைப்பு. பெரும்பான்மை மக்கள் யார்? உழைக்கும், ஏழை எளிய, சாதாரண, அடித்தட்டு மக்கள். இந்தப் பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையோர் எங்கு வாழ்கிறார்கள்? கிராமப்புறங்களில், சின்னச் சின்ன ஊர்களில். அந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் எல்லாம் இனி ரயில்கள் நிற்காது என்று அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. இதன் உள்ளர்த்தம் அந்த ஸ்டேஷன்களையெல்லாம் மூடிவிடுவதே.
50 பேர் ஏற வேண்டும்
இந்த முடிவுக்குக் காரணம், அங்கு பயணிகள் வருகை குறைவாம், அதனால் வருவாயும் குறைவாம். எப்படி இருக்கிறது பாருங்கள்; இது பாஜக மோடியின் தலைமையிலான அரசா அல்லது தனியார் வணிக நிறுவனமா? அல்லது தனியார் வணிக நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனமா இந்த ரயில்வேத்துறை? ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றால், குறைந்தபட்சம் 50 பேர் ஏற-இறங்க வேண்டுமாம்.
குறைக்க திட்டம்
இதை அளவுகோலாக வைத்து புதிய கால அட்டவணை அதாவது ‘பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை' தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ். அதன்படியே குறைவான பயணிகள் ஏறும்-இறங்கும் வருவாய் குறைவான 6,000 ஸ்டேஷன்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைக் குறைக்கத் திட்டமிடப்பட்டதாம்.
சென்னை தொகுப்பு
நாடு முழுவதும் தனியார் ரயில்களை இயக்க மும்பை, டெல்லி, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. நமது சென்னை தொகுப்பில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படும். அவை சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர், திருச்சி - சென்னை, கன்னியாகுமரி - சென்னை, சென்னை - புதுடெல்லி, சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்கள்.
தொழிலாளர் சங்கம்
இது தொடர்பாக தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் (டிஆர்இயு) துணைப் பொதுச்செயலர் மனோகரன், "தனியார் ரயில்களை இயக்குவதால், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும். மக்களின் வரிப்பணத்திலான பொதுத்துறை நிறுவனத்தில் தனியார் ரயில்கள் என்பது கண்டனத்துக்குரியது. இந்த முடிவைக் கைவிடாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்றார்.
தனியாருக்கு தாரை வார்ப்பு
இந்திய இரயில்வே உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இதில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் இடம்பெயர்கிறது; 16 லட்சம் பேர் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இதில் நாள்தோறும் 14,444 தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களுக்குச் சொந்தமான இவ்வளவு பெரிய பொதுத்துறை நிறுவனத்தைத்தான் தனியாருக்குத் தாரைவார்க்கிறார் மோடி. இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ரயிவேயில் மக்களுக்கு எதிரானவற்றை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!