குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே... புதிய கல்விக் கொள்கை... வேல்முருகன் பாய்ச்சல்
சென்னை: புதிய கல்விக் கொள்கை என்பது கொத்தடிமை கல்விமுறை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் வகையில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு....முடிவில் இழுபறி... விசாராணை ஆகஸ்ட் 10க்கு ஒத்தி வைப்பு!!
படிப்படியாகத் தேய்ந்தன
மெக்காலே கல்வித் திட்டத்தை 1968இல் பிரதமர் இந்திரா காந்தி மாற்றினார். அது சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கல்விக் கொள்கை ஆனது. 1986இல் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். அதுதான் தற்போது அமலில் இருக்கிறது. 1992இல் பிரதமர் நரசிம்மராவ் அதில் சில திருத்தங்களைச் செய்தார். மெக்காலே கல்வித் திட்டத்திற்குப் பின் வந்த கல்விக் கொள்கைகள் பொதுவாக படிப்படியாகத் தேய்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
கஸ்தூரி ரங்கன் குழு
மோடியின் புதிய கல்விக் கொள்கை-2020க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் மோடி அரசு 2017இல் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 2019 ஜூன் 1ந் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; ஒற்றை நாடு-ஒற்றைக் கல்விமுறை என்பதை அங்கீகரித்தது;
கார்ப்பரேட்
கார்ப்பரேட்டுகளுக்குக் கொத்தடிமைகளைத் தேர்வு செய்ய உதவுவது; 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களை வடிகட்டி அவர்களின் இடைநிற்றல்களை அதிகரிப்பது; மும்மொழித் திட்டம் மூலம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது. எப்படியெனில், இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும்; மற்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் மூன்றாவது மொழியாக விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
புராண காலம்
அனைத்து உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு; 6ஆம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும்; இளங்கலை 3-4 ஆண்டுகள் நடத்தப்படும்; முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும்; இந்தப் புதிய கல்விக் கொள்கை, நமது கல்விமுறையை பின்னோக்கிப் புராண காலத்துக்குச் செலுத்தும் கொள்கை; மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்; கல்விக்காக கோச்சிங் சென்டர்களை நாடத் தூண்டும். மூன்று வயதிலேயே கல்வியைத் தொடங்கச் செய்வது பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறிப்பதாகும்.
வலியுறுத்தல்
இப்படிப்பட்ட புராண, இதிகாச கட்டுக்கதைகளில் வரும் குருகுலக் கல்வி, ராஜாஜியின் குலக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் மறுபதிப்பான மோடியின் புதிய கல்விக் கொள்கை-2020க்குத்தான் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள் பெரிதாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவோ, போராடவோ முடியாது என்பதைப் பயன்படுத்தி, மக்கள்விரோதச் சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. கொத்தடிமைக் கல்விமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலளித்ததை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!