விவசாயிகள் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்... பாரத் பந்துக்கு வேல்முருகன் முழு ஆதரவு..!
சென்னை: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வரும் 8-ம் தேதியன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் பாஜக அரசு இழுத்தடித்து வருவது வேதனைக்குரியது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
விவசாயிகளின் பாரத் பந்த்... வெற்றி பெற செய்யுங்கள்... அனைத்துகட்சி தலைவர்கள் வேண்டுகோள்!
11-வது நாள்
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் இன்றுடன் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியை தழுவியுள்ளது.
உறுதுணை
இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, வரும் 8 ஆம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.
கண்டனம்
இதுவரை விவசாயிகளுடன் மத்திய பா.ஜ.க. அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமாக எதையும் சொல்ல மறுக்கிறது என்ற கோபம், விவசாயிகளிடம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. ஆனாலும், மாநில உரிமைகளைப் பறிக்கும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என பாஜக அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
கடும் குளிர்
கடும் குளிரிலும், முறையான உணவின்றி போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் பாஜக அரசு இழுத்தடித்து வருவது வேதனைக்குரியது. எனவே செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று இராமல், விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.