பணமில்லை என்றாலும்... உதவ மனமிருக்கிறது... தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிவாரண பொருட்கள்
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய தொகுப்பு பைகளை த.வா.க. நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
மேலும், சாலைகளில் தங்கியிருக்கும் இரவல் பெறுவோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தினமும் ஒரு வேளை உணவு அளிக்கும் அறப்பணியையும் இவர்கள் தொடர்கின்றனர்.
போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியவர்
ஏழை எளிய மக்கள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்களும், தினக்கூலி பெற்று குடும்பத்தை கவனித்துக்கொண்டவர்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும், நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் இந்த மனிதநேய பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
சொந்த நிதி
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பலரும் பொருளாதார ரீதியாக பெரிய செல்வந்தர்கள் இல்லை என்றாலும் கூட, வேல்முருகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தங்களால் இயன்ற உதவிகளை அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஏழை எளியோருக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் செய்து வருகின்றனர். சொந்த நிதியில் கட்சியினர் நிவாரணப் பொருட்களை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் அவ்வப்போது தொலைபேசி வாயிலாக பேசி த.வா.க. தலைவர் வேல்முருகன் ஊக்குவிக்கிறார்.
உணவு பொட்டலம்
சென்னை, கோவை, கடலூர், திருச்சி, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் தங்கியிருக்கும் இரவல் பெறுவோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் உணவு பொட்டலங்களை விநியோகம் செய்கின்றனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய கபசுரக் குடிநீரையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும், யாராவது மருத்துவ உதவிகள் கோரினால் அதனை வேல்முருகன் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு உரிய மருத்துவ ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர்.
மனமிருக்கிறது
நிவாரண பொருட்கள் வழங்குவது பற்றி நம்மிடம் பேசிய அக்கட்சியின் மாநில முக்கிய நிர்வாகி ஒருவர், தங்களிடம் பணமில்லை என்றாலும் உதவி செய்ய வேண்டும் என்ற மனமிருப்பதாகவும், நிர்வாகிகள் வசிக்கும் பகுதிகளில் அக்கம்பக்கத்தில் யாரும் பசியால் நோகிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வேல்முருகன் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த ஒரு மாதமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் தங்கியுள்ள வேல்முருகன், அங்கிருந்தவாறே கட்சியினர் மேற்கொள்ளும் நிவாரணப்பணிகளை தொலைபேசி மூலமும், வாட்ஸ் அப் குழு மூலமும் கேட்டறிந்து வருகிறார்.