இப்படி பயந்து பயந்தா தீபாவளியை கொண்டாடுவது.. தமிழிசை வேதனை
பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்க கூடாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: பயந்து பயந்தா தீபாவளியை கொண்டாடுவது? என்றும் இப்படி பயந்து கொண்டு கொண்டாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க கூடாது என்றும் தமிழிசை சவுந்தராஜன் காட்டமாக தெரிவித்துள்ளதார்.
தமிழக பாஜக தலைவருக்கு கடந்த தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வளர்ந்து வரும் அரசியல் நட்சத்திரம் என்ற விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறுவதற்காக தமிழிசை, அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் விருதினை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர்.
[மரகதலிங்கத்தை காப்பாற்ற "மாணிக்கத்தால்தான்" முடியும்- தமிழிசை]
விருதை சமர்ப்பிக்கிறேன்
அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தராஜன் பேசியதாவது: "விவேகானந்தரின் மண்ணில் இருந்து அவருக்கு பெருமை சேர்த்த மண்ணில் சென்று விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அளித்த இந்த விருதினை அனைத்து பாஜக தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் கிடையாது.
மகிழ்ச்சியை பாதிக்கும்
வெடியும், வெளிச்சமும் சேர்ந்தது தான் தீபாவளி பண்டிகையே. வெடி இருந்து வெளிச்சம் இல்லாவிட்டாலும், வெளிச்சம் இருந்து வெடி இல்லாவிட்டாலும் அது சரியாக இருக்காது. ஆனால் இதில் ஒலிக்கு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டால், அது மகிழ்ச்சியை பெருமளவு பாதிக்கும். அதேபோல அது சம்பந்தப்பட்ட தொழிலையும் பாதிக்கும்.
பயந்து கொண்டாடுவதா?
ஏனென்றால் இரவு ஆரம்பித்து விடியற்காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் தீபாவளியின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. பண்டிகையை பண்டிகையாக கொண்டாட வேண்டுமே தவிர இப்படி நிர்ப்பந்தத்துடன் கொண்டாடக்கூடாது. மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய தீபாவளியை பயந்து பயந்து கொண்டாட வேண்டிய சூழ்நிலையை ஒருபோதும் உருவாக்க கூடாது.
பீதி ஏற்படுத்த கூடாது
பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்ய கூடாது. இது ஒரு முழுவதுமான கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பு மக்களை பாதித்துள்ளது. இதில் தீர்ப்பினை மீறினால் தண்டனை என்பது மேலும் மக்களை அச்சம் கொள்ளவே செய்யும். எனவே இது கண்டிக்கத்தக்கது"
இவ்வாறு தமிழிசை கூறினார்.