எனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த "தங்கம்"
தேனி கூட்டத்தில் முக ஸ்டாலினுக்கு தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்தார்
Recommended Video
சென்னை: தங்க தமிழ்செல்வனும், முக ஸ்டாலினும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல இருக்கிறது. தேனி மாவட்ட அதிமுகவை அப்படியே வழித்து கொண்டு வந்து திமுகவில் இணைத்து விடும் மெகா பிளானே உள்ளது போல தெரிகிறது. அதனால்தான், அமமுக, அதிமுக என ரெண்டு தரப்புமே செம கடுப்பில்
அமமுக கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் நேற்று நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசிய தங்க தமிழ்செல்வன், "டிடிவி தினகரன் நடத்தும் அந்த கட்சியை மக்கள் விரும்பவில்லை, ரசிக்கவில்லை, செத்த பாம்பை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இதனால் அதை பற்றி பேசுவது தவறு.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியடைந்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 1952-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் தேர்தல் செலவு 143 கோடி ரூபாய். ஆனால் தேனியில், அந்த ஒரு தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரூபாய் 550 கோடி செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.
அழுத அமைச்சர்கள்
ஜெயலலிதாவிடம் இவர்கள் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அழுதுகொண்டே அமைச்சர் பதவி ஏற்றவர்கள். அவர் இறந்த பின்பு அழாமல் பதவி ஏற்றனர். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக தலைவர் தமிழகத்தை வழி நடத்தி செல்ல வேண்டும்.
ஆவேசம்
எனக்கு சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என்று எந்த பதவியும் வேண்டாம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் காவல் துறையை மட்டும் ஒரு மாதம் என்னிடம் கொடுங்கள். அந்த துறையை என்னிடம் கொடுத்தால் பன்னீர்செல்வம் குடும்பத்திடமிருந்து ஓராண்டுக்கு தமிழகத்துக்கு தேவையான 3 லட்சம் கோடியை நான் எடுத்து கொடுக்கிறேன்" என்று ஆவேசமாக பேசி கோரிக்கையும் வைத்தார்.
கை தட்டிய ஸ்டாலின்
இதில் ஹைலைட் என்னவென்றால், தங்கதமிழ்செல்வன் பேசும்போது, "அமைச்சர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். யார், யார் எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என்று சொன்னபோது, ஸ்டாலினே கைதட்டி வெகுவாக ரசித்தார்.
நடந்துவிட்டது
இதன்பிறகு பேசிய ஸ்டாலின், "அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம், ஆனால் நடக்கவில்லை தற்போது நடந்துவிட்டது" என்றார்.
செந்தில் பாலாஜி
இதிலிருந்து 2 விஷயங்கள் தெரியவருகிறது.. ஒன்று, தேனி மாவட்ட அதிமுகவை அப்படியே தன் பக்கம் நகர்த்த தங்க தமிழ்செல்வன் தீவிர முயற்சியில் இறங்கி பாதி வெற்றியும் பெற்றுள்ளார். மற்றொன்று, திமுகவை நம்பி வந்தவர்களை ஸ்டாலின் கைவிடவில்லை என்பதும், செந்தில்பாலாஜியை போன்றே முக்கியத்துவம் தரப்பட்டு அவர்கள் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.