சிறையில் சசிகலாவை சந்திக்க தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் திட்டம்?
தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமமுகவில் குழப்பமும், பிரச்சனையும் உச்சக்கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு விஷயத்திலேயும் தோல்வி முகத்தையே சந்தித்து வருகிறது அமமுக.
ஆர்.கே. நகர் வெற்றி தவிர இதுவரை பெற்றது எல்லாமே இவர்களது சறுக்கல்கள்தான். இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு, 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு என அடி மேல் அடி வாங்கி வந்த தினகரன் இதுநாள் வரை பொறுமையாகவே அனைத்தையும் சந்தித்து வந்தார்.
தினகரனுக்கு ஷாக்
இந்த சூழ்நிலையில், வலதுகரம் என சொல்லப்பட்ட செந்தில் பாலாஜி நேற்று திமுகவில் இணைந்தபிறகு சற்று நிலைகுலைந்தே போய்விட்டார். என்னதான் வழக்கம்போல் சமாளித்து "கூல் பேட்டி" கொடுத்தாலும் டிடிவி தினகரனுக்கு இது ஒரு பெரிய ஷாக் தான் என சொல்லப்படுகிறது.
குழம்பி உள்ளார்
இதனால் தன்னுடன் இருக்கும் மற்ற எம்எல்ஏக்களை பற்றின கவலையும் அவருக்கு தற்போது வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக பிரிந்தவர்களை ஒரு பக்கம் கூப்பிட்டு கொண்டிருக்கிறது. இதனால் தினகரன் ரொம்பவே குழம்பி உள்ளார்.
வருங்காலம்
தினகரன் மட்டும் இல்லை, பதவி போன மற்ற ஆதரவு எம்எல்ஏக்களும் இனி என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர். ஏற்கனவே தொகுதிகளில் கெட்ட பெயர் ஏற்பட்டு, வருமானமும் இன்றி, வருங்காலமும் என்னவென தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்.
திங்கட்கிழமை
அதன்படி தங்க.தமிழ்செல்வன் உள்ளிட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்களும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மேல் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் தங்களது நிலை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை சசிகலாவிடம் இவர்கள் தெரிவிப்பார்கள் என தெரிகிறது.
விவாதிக்க முடிவு
இதேபோல, டிடிவி தினகரனும், சசிகலவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அடுத்த கட்ட நடவடிக்கையை எவ்வாறு எடுப்பது, கூட்டணி சம்பந்தமான முடிவு உள்ளிட்டவற்றை சசிகலாவிடம் விவாதிப்பார் என தெரிகிறது.
ஆதரவு எம்எல்ஏக்கள்
சசிகலாவை சந்திக்க போவதாக கூறும் இந்த 9 எம்எல்ஏக்களும், கட்சியின் பொதுச் செயலாளர், துணை பொது செயலாளர் பேச்சை மீறி ஒருபோதும் நடக்க மாட்டோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், செந்தில்பாலாஜியை போல் மேலும் சில ஆதரவு எம்எல்ஏக்கள் அமமுகவிலிருந்து விலகுவார்கள் என்ற தகவல்கள் இப்போது தீயாக பரவி வரும் நிலையில், சசிகலாவை எம்எல்ஏக்கள் சிறையில் சந்திக்க போவதாக வரும் தகவல் அரசியல் களத்தை கூடுதலாக சூடாக்கி உள்ளது.