முதல்வர் ஏன் ஃபாரீன் போயிருக்காருனு இன்னும் 2 நாள்ல சொல்றேன்.. தங்கதமிழ்ச் செல்வன் பகீர் பேச்சு
Recommended Video
சென்னை: முதல்வர் ஏன் ஃபாரீன் போயிருக்கார் என்பதை இன்னும் 2 நாள்களில் சொல்கிறேன் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கு புதிதாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கட்சிக்காக ஓடாக தேய்ந்த எத்தனையோ நிர்வாகிகள் திமுகவில் இருக்க நேற்று வந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கு இத்தனை பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது நிச்சயம் அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்றார்.
ஸ்டாலின்
இந்த நிலையில் தனக்கு பதவி வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்த தங்கம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெரிய பொறுப்பை கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை
பெரிய ஜாம்பவான்களான திருச்சி சிவா, ஆ ராசா ஆகியோருடன் பணிபுரிவது பெருமையை அளிக்கிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார்.
கொள்கை பரப்பு செயலாளர்
ஜெயக்குமார் கூறிய கருத்து ஆடு நனையுதேனு ஓநாய் அழும் கதையாக இருக்கிறது. திமுக விவகாரத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை. என்னை கொள்கை பரப்பு செயலாளராக தேர்வு செய்ததற்கு அனைவருக்கும் விருப்பம் உள்ளது.
அவசியம்
முதல்வர் வெளிநாட்டு பயணத்தின்போது கோட் சூட் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. நம் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டையுடன் சென்றிருக்கலாம். மேலும் ஆன்லைனிலேயே எல்லாவற்றையும் செய்ய முடியும்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் நேரில் போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
இன்னும் 2 நாள்
அப்படியிருக்கும் போது அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்றால் அதில் சம்திங் உள்ளது. அவர் ஏன் வெளிநாடு சென்றார் என்பதற்கான காரணம் எனக்கு வந்துள்ளது. இதை இன்னும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நான் இன்னும் ஓரிரு நாளில் ஊடகங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார் தங்கதமிழ்ச் செல்வன்.