திமுகவில் சேர்ந்த உடனேயே ஒபிஎஸ்க்கு எதிராக வேலையை காட்டிய தங்க தமிழ்ச்செல்வன்
Recommended Video
சென்னை: தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த கோரிக்கையை ஏற்று ஒபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது. இதன் மூலம் திமுகவில் சேர்ந்த உடனேயே ஒபிஎஸ்க்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் காட்டத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை தூக்க வேண்டும் என தர்ம யுத்தம் தொடங்கினார் இன்றைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். இதில் வெற்றியும் பெற்ற ஓ பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களின் பதவிக்கு திமுகவில் சேர்ந்த உடனேயே தங்க தமிழ்ச்செல்வன் சிக்கலை ஏற்படுத்த முயன்றுள்ளார்,
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் இருந்து ஒ பன்னீர்செல்வம் தனியாகபிரிந்து தனி அணியாக செயல்பட்டார். அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். ஒபிஎஸ்சின் இந்த தர்ம யுத்தத்தின் போது முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏகள் வாக்காளித்தனர்.
நடவடிக்கை இல்லை
அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு கொண்டு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஒ பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை
சபாநாயகர் முடிவே இறுதி
இதன் காரணமாக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா முகர்ஜி அமர்வு 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, சபாநாயகர் முடிவே இறுதியானது என்றும் தீர்ப்பளித்தது.
திமுக-டிடிவி வழக்கு
இதன்காரணமாக திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
விசாரிக்க கோரிக்கை
இந்த சூழலில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 11 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விரைவில் 11 எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
ஒபிஎஸ்க்கு சிம்ம சொப்பனம்
இதன் மூலம் திமுகவில் சேர்ந்த உடனேயே தங்க தமிழ்ச்செல்வன் ஒ பன்னீர்செல்வத்திற்கு எதிராக வேலையை காட்டத்தொடங்கிவிட்டார். தர்ம யுத்தததால் அதிகாரத்தை கைப்பற்றிய ஒபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் தர்மயுத்ததை தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். இனி அரசியலில் ஒபிஎஸ்க்கு சிம்மசொப்பமாக தங்கம் இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.