Exclusive: கொசு ஒழிப்பு ஒப்பந்தத்திற்கு எதற்கு முதல்வர் தேவை.. தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி
சென்னை: திமுகவுக்கும், மு,க.ஸ்டாலினுக்கும் தன் வாழ்நாள் இறுதிவரை உண்மையாக இருந்து உழைப்பேன் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: திமுகவில் நீங்கள் இணைந்து சில நாட்களிலேயே இண்ஸ்டன்ட் ஆக மிகப் பெரிய பதவி கிடைத்திருக்கிறது? எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தளபதி என்னை நியமித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் பெருந்தன்மையை எண்ணிப்பார்த்து நான் பெருமையடைகிறேன்.
அண்ணன் வழியில்.. அரசியலில் கலக்கத் துடிக்கும் ஓபிஎஸ்ஸின் 2வது மகன்
கேள்வி: நீங்க திமுகவில் இணையும் போதே முக்கிய பதவி வழங்க வேண்டும் என டிமாண்ட் வைத்ததாக கூறப்படுகிறதே..?
பதில்: சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த நிபந்தனையும் வைக்காமல் திமுகவில் இணைந்தவன். அண்ணன் தளபதியின் உழைப்பும், பெருந்தன்மை குணமும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அதனால் திமுகவில் இணைந்தேன். நான் எதிர்பார்க்காமலேயே எனக்கு தளபதி மிகப்பெரும் அங்கீகாரம் அளித்துள்ளார். இனி என் வாழ்நாள் இறுதி வரை அண்ணன் தளபதிக்கு உண்மையாக இருந்து கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவேன்.
கேள்வி: திமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கிடைத்து விட்டது..இதை வைத்து உங்கள் திட்டம்?
பதில்: திமுக என்பது மிக மிகப்பெரிய கட்சி. ஆகையால் அனுமாருக்கு அணில் உதவியது போல் கட்சி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வேன். கொள்கைகளை மேடைப்பேச்சு, ஊடக பேட்டிகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். மேலும், எங்கள் மாவட்ட அரசியலில் ஈடுபட்டு தேனி மாவட்டத்தில் திமுகவை வலிமைப்படுத்துவேன்.
கேள்வி: அண்மையில் ஓ.பி.எஸ். மகனும் திமுக பொருளாளர் துரைமுருகனும் சந்தித்து பேசினார்கள்..
பதில்: கேள்வியை முடிக்கும் முன்பே (பலத்த சிரிப்புடன்) பொதுக்கணக்கு குழு தலைவர் என்ற முறையில் அண்ணன் துரைமுருகன் ஆய்வுக்கு தேனிக்கு வந்தார். வந்த இடத்தில் எம்.பி.என்ற முறையில் ரவீந்தரநாத்தை சந்தித்திருக்கிறார். அதைத் தவிர வேறு என்ன இருக்கிறது.
கேள்வி : முதல்வரின் வெளிநாடு பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. இந்த நேரத்தில் அவர் வெளிநாடு சென்றிருக்க தேவையில்லை. ஆனால் அவர் சென்றால் தான் எல்லாம் நடக்கும் என்பது போலவும், அவசியமான பயணம் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
எனக்கு கிடைத்த தகவல் படி, அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை முதலீடுகளை கொடுக்க சென்றிருக்கிறர். தமிழ்நாட்டில் கொசுக்களை ஒழிப்பதற்காக லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படுவதாக கேள்விப்பட்டேன். அது ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் டெண்டர் என்கிறார்கள். அந்த அக்ரீமெண்ட்டில் அமைச்சர் கையெழுத்தே போதுமானது, என்னவோ தெரியவில்லை எடப்பாடி சென்றிருக்கிறார்.