அதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்?
Recommended Video
சென்னை: தினகரனின் அமமுக கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது உறுதி என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். துணை முதல்வர் ஓபிஎஸ்- மகன் ரவீந்தரநாத்துக்கு செக் வைக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வனை எடப்பாடி தரப்பு ராஜ்யசபா எம்.பியாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடிக்கு எதிராக தினகரன் அணியில் தளபதியாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இவரது தலைமையில்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை, குடகு ஹோட்டல்களில் தங்கி குடைச்சல் கொடுத்து வந்தனர்.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்த பிறகு தங்க தமிழ்ச்செல்வனின் உக்கிரம் உச்சமானது. தினகரனை ஆதரித்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார் தமிழ்ச்செல்வன். அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்தே தினகரனுடன் முரண்பட்டு வந்தார். ஆனால் அதை அவ்வப்போது மறுத்தும் வந்தார் தங்கம்.
லோக்சபா தேர்தலில் தோல்வி
லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் அவர். அதன் பின்னர் தீவிரமான அரசியல் களத்தில் இருந்து விலகி இருந்தார்.
சன் நியூஸ் பேட்டி
இதனால் தங்க தமிழ்ச்செல்வன் திமுக அல்லது அதிமுகவுக்கு தாவப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், முதல்வர் எடப்பாடி அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தங்கம்.
அதிமுகவில் தங்க தமிழ் செல்வன்
அத்துடன் தினகரன் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் தங்கம் தமிழ்ச்செல்வன் எந்த நேரத்திலும் அதிமுகவுக்கு தாவக் கூடும் என செய்திகள் வெளியாகின. இதை அதிமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ராஜ்யசபா எம்.பி பதவி?
மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி. ஆகியோருக்கு டெல்லியில் செக் வைக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வனை ராஜ்யசபா எம்.பி.யாக்கவும் முதல்வர் தரப்பு முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஓபிஎஸ் குடும்பத்தின் டெல்லி செல்வாக்கு ஒரு உறுத்தலாக எப்போதும் தங்கம் இருப்பார் என்பதும் எடப்பாடி தரப்பின் கணக்காம்.