தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் ராஜாமணி அம்மாள் காலமானார்- ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்
சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.எ.ஏ, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோரது தாயார் ராஜாமணி அம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன். இவரது மனைவி ராஜாமணி அம்மாள். தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு, லோக்சபா திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரது தாயார் ராஜாமணி அம்மாள்.
உடல்நலக் குறைவால் ராஜாமணி அம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல்: முன்னாள் அமைச்சர் திரு.தங்கபாண்டியன் அவர்களின் துணைவியாரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான திருமதி.ராஜாமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. திருமதி.ராஜாமணி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்: முத்தமிழறிஞர் கலைஞருக்கு தென் மாவட்டங்களில் "போர் வீரராக" விளங்கிய, மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவி திருமதி. ராஜாமணி தங்கபாண்டியன் உடல் நலிவுற்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த தங்கபாண்டியன் அவர்களுக்குக் கழகப் பணியிலும் - அவரது பொதுப்பணியிலும் உற்ற துணையாகவும் - உறுதிமிக்க இல்லத்தரசியாகவும் விளங்கியவர். நான் விருதுநகர் மாவட்டத்திற்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் - அவரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளேன். அவரும் பெற்ற அன்னையைப் போன்று என் மீது பாசமழை பொழிந்து, நலம் விசாரித்து எனக்கும் என் குடும்பத்திற்கும் அன்பின் இமயமாகத் திகழ்ந்தவர். இன்று கழகப் பணிகளில் எனக்குத் துணையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு - தென் சென்னை மக்களவை உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வளர்த்தெடுத்து - ஆளாக்கி ஒருவர் சட்டமன்றத்திலும், இன்னொருவர் நாடாளுமன்றத்திலும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுக்க முழுக்க திருமதி. ராஜாமணி தங்கபாண்டியன் அவர்களையே சாரும். அவரது மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும், அன்புச் சகோதரி திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.