அதிமுகவில் இணைய தங்கதமிழ்செல்வனுக்கு பச்சைக்கொடி.. ஜெயக்குமாரை தொடர்ந்து கடம்பூர் ராஜும் பேட்டி
Recommended Video
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விரும்பினால், தாய் உள்ளத்தோடு ஏற்போம் என்றார். தங்கத்தமிழ் செல்வன் விரைவில் அதிமுகவில்இணைய உள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் அமைசசரின் கருத்துக்ளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமமுக கொள்ளை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதன் பிறகு கடும் அப்செட்டில் இருக்கும் அவர் அமமுகவை விட்டு விலகி விரைவில் அதிமுகவில் சேர விரும்புவதாக தகவல்கள் கசிந்தன. இதற்கு தங்கதமிழ்செல்வன் உடனே மறுப்பும் தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்கதமிழ்செல்வனை அதிமுகவில் மீண்டும் இணைக்க விரும்புவதாகவும் தகவல்கள் பரவின.இதனை உறுதிபடுத்தும் விதமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்றார்.
இப்போது அமைச்சர் கடம்பூர் ராஜுவும், தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் தாயுள்ளத்தோடு வரவேற்போம் என கூறியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் ஆகியார் வலியுறுத்தி உள்ளார்கள்.
எனவே பிரிந்தவர்கள் இணைவது வழக்கம். தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவது என்றால் அது அவரது விருப்பம். அவரை தாய் உள்ளத்தோடு ஏற்போம். அவர் மட்டுமின்றி அதிமுகுவில்இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் இணைந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
சசிகலா, தினகரன் இருவரும் தலைமை தாங்கி தனியாக இயக்கத்தினை தொடங்கியவர்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. இயக்கத்தினை தொடங்கியவர்களுக்கும், இணைந்தவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அங்கு சென்றவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்களை நாங்கள் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்" இவ்வாறு கூறினார்.
தண்ணீர் பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி, தேவையான சிறப்பு நிதிகளை ஒதுக்கி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சென்னைக்கு மட்டும் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கி ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.