ஒரே ஒரு அறிக்கை.. அடங்கிய முருகன், சி.டி.ரவி அண்ட் கோ.. ஓங்கிய எடப்பாடி பழனிசாமி கை.. செம ட்விஸ்ட்
சென்னை: திடீரென கூட்டணிக்குள் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி விட்டது. அதிமுக என்ன சொல்கிறதோ அதைக் கேட்க தயார் என்று அறிவித்துவிட்டது பாஜக.
ஆமாம்.. என்னதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சமீபத்தில் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டாலும் கூட, அதிமுகவை தனது கைக்குள் வைத்திருக்க பாஜக விரும்பியதாக தான் தெரிந்தது.
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் என அந்தக் கட்சி ஒருமனதாக அறிவித்த பிறகும் அதை ஏற்க மறுத்தது பாஜக.
ஏற்க மறுத்த பாஜக
சாதாரண தலைவர்கள் முதல் பாஜகவின் மாநில தலைவர் முருகன், வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்ட பலரும் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி தான் அறிவிக்கும். அதிமுக அறிவிக்க முடியாது அது நடைமுறை கிடையாது என்று பேசிக்கொண்டே இருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணிக் கட்சியான பாஜக இவ்வாறு பேசி வந்தது அதிமுகவுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
முனுசாமி காட்டம்
ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதை வைத்து அதிமுகவை அடி பணிய வைக்கலாம் என்று பாஜக நினைக்கிறது போல.. எனவே தான் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால், தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் இறுதியில் தெரிவித்தார். அதற்குப் பிறகும் அதே பல்லவியை தான் பாடி வந்தனர் பாஜக தலைவர்கள். இந்த நிலையில்தான் அதிமுக சீனியர், முனுசாமி பாஜகவை விளாசி எடுத்துவிட்டார். எங்கள் முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் தெரிவு செய்வோம். பிடித்தவர்கள் கூட்டணியில் இருக்கலாம். தமிழகத்தில் தேசிய கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது. திராவிட கட்சிகள் மட்டும் தான் இங்கு பலம் பொருந்தியவை என்று விளாசிவிட்டார் அவர்.
ரஜினிகாந்த் உறுதி
அதிமுக மனசாட்சியின் ஒட்டுமொத்த குரலாக முனுசாமியின் குரல் ஒலித்தது. இதனால் ஓடிப்போய் எடப்பாடி பழனிசாமியை பார்த்தார் பாஜக தலைவர் முருகன். இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ரசிகர்கள் போராட்டம் நடத்தினாலும் சரி நான் கட்சி தொடங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது போன்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்தி அதன் விளைவாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பாஜகவில் சில தலைவர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் எனது மனதை வேதனை படுத்த வேண்டாம்.. நான் அரசியல் வரமாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்த அறிக்கை வந்த சில மணி நேரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவி அப்படியே அமைதியாக மாறி பேட்டியளித்தார். அதிமுக தான் எங்கள் கூட்டணியில் "பெரிய கட்சி" நாங்கள் சின்ன கட்சிதான். எனவே முதல்வர் வேட்பாளரை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றாரே பார்க்கலாம். இதைத்தானே அதிமுக இத்தனை வாரங்களாக சொல்லிக்கொண்டிருந்தது இப்போதுதான் உங்களுக்கு அதிமுக பெரிய கட்சி என்று தெரியுமா? என்று ரத்தத்தின் ரத்தங்கள் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து பேசியது சத்தமாக கேட்டது என்றால் பாருங்களேன்.
எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்
அதிமுகதான் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என்று சிடி ரவி கூறியதன் அர்த்தம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியை நாங்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்பதுதான். ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஒருமனதாக அறிவித்துவிட்டனர். கூட்டணியில் அபஸ்வரம் எழுப்பி வந்த பாஜகவும் இப்போது திடீரென பணிந்து விட்டது. அவர்களும் எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்கிறார்கள். எனவே செம மகிழ்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ரஜினி எடுத்த இந்த முடிவு திமுகவுக்கு சாதகமோ இல்லையோ எடப்பாடி பழனிச்சாமிக்கு ரொம்பவே சாதகமாக மாறி விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.