விவசாயிகளுக்கு உதவித்தொகை, பென்சன் திட்டம் அறிவித்ததற்கு நன்றி.. பிரதமருக்கு எடப்பாடி கடிதம்
Recommended Video
சென்னை: விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பென்சன் திட்டம் அறிவித்ததற்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் மோடி அரசின் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மன் சித்தி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் சுமார்12 கோடி பேர் இத்திட்டத்தில் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, கடந்த வியாழனன்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். பிரதமராக பதவியேற்ற மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் சேர்ந்து 57 பேர் மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
அமைச்சர்கள் பதவியேற்று கொண்டாலும் அன்று யார் யாருக்கு, என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. பின்னர் அடுத்த நாளன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் குறித்த தகவல் வெளியானது.
இந்நிலையில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடியது. அந்த கூட்டத்தில் நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் மற்றும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக ஒரு சில தேர்தல் வாக்குறுதி திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி ஏழை விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் திட்டம், சில்லரை வர்த்தகர்கள் 3 கோடி பேருக்கான உதவித்தொகையை உயர்த்துவது மற்றும் ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள், அவர்களின் பிள்ளைகளுக்கான படிப்பு உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தை விரிவு படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அக்கடிதத்தில் சிறு மற்றும் சில்லறை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவித்ததற்கும் நன்றி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை விரைந்து ஒப்புதல் அளித்த திட்டங்களால், கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பலனடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்து வரும் முழு ஒத்துழைப்பு தொடரும் என முதல்வர் பழனிசாமி நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.