பெரியாரும் மணியம்மையும்.. ஒரு ஆத்மார்த்தமான தோழமை.. அருமையான இணை.. அழகான துணை..!
பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததன் பின்னணி காரணம் இதுதான்
சென்னை: பெரியார் - மணியம்மை திருமணம் காலகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிகழ்வு ஆகும்.. ஆனால் இதற்கு என்ன காரணம்? மணியம்மையை பெரியார் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? நிர்ப்பந்தம்தான் என்ன?
பெண்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்வு பரியந்தம் போராடியவர் பெரியார்.. பெண் விடுதலைக்கு தமிழகத்திலேயே மிக அதிகமாக பேசியவரும் எழுதியவரும், அத்துடன் நில்லாமல் அவர்களுக்காக போராடியவரும் தந்தை பெரியாருக்குதான் முதலிடம்!
அதனால்தான் பெண்கள் நடத்திய மாநாட்டில் ஈவெ ராமசாமியை தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டப்பட்டது. அந்த அளவுக்கு பெண்களிடம் கண்ணியமாகவும், தரமாகவும் நடந்து கொண்டவர்.. அத்தகையவர் தனது 72-வது வயதில் 27 வயது மணியம்மையை பணத்தாசை காட்டியோ, பதவி ஆசை காட்டியோ, வற்புறுத்தியோ திருமணம் செய்து கொண்டிருப்பாரா? என்பதை யோசிக்க வேண்டும்.
அறிவுபூட்டின் திறவுகோல்.. அடிமை விலங்கை நொறுக்கியவர்.. சமூக நீதி தந்தை.. வெண்தாடி புயல்.. பெரியார்
பிரெட்ரிங் ஏங்கல்ஸ்
மணியம்மையை மணக்க நேர்ந்த சூழலையும், காரணத்தையும் தந்தை பெரியாரின் கோணத்திலிருந்துதான் அணுகுவது சரியாக இருக்கும். காரல் மார்க்ஸின் நெருங்கிய தோழரான பிரெட்ரிங் ஏங்கல்ஸ் எழுதுகிறார் "ஒரு மனிதனை பற்றிய அபிப்ராயம், அவனது வாழ்க்கை பின்னணியில் இருந்துதான் அணுக வேண்டுமே தவிர, தன் சூழல், தன் அனுபவம், தனது காலம் ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பது தவறாகும்" என்கிறார். இதைதான் பெரியார் - மணியம்மை விஷயத்தில் நாம் பார்க்க வேண்டியது அவசியம்.
நாகம்மை
தந்தை பெரியார் அன்னை நாகம்மையை பெரிதும் நேசித்தவர்.. அவருக்கு சம உரிமை வழங்கியவர்.. ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நாகம்மை, "இப்போது தோழர் ஈவெரா உரையாற்றுவார்" என்று அறிவித்த அளவிற்கு வளர்த்தவர்.. அத்தகைய நாகம்மையின் மறைவை பெரியாரால் தாங்கி கொள்ள முடியவில்லை.. அவர் நினைத்திருந்தால், அப்போதே வேறு பெண்மணியை திருமணம் செய்து கொண்டிருக்க முடியும்.. செக்சுக்கு முதலிடம் தந்திருந்தால் நிச்சயம் நடுத்தர வயதில் மறுமணம் செய்திருப்பார்.. ஆனால் 72 வயது வரை அவர் தனியாகத்தான் வாழ்ந்தார்.
ராஜாஜி
நடுத்தர வயதில் மனைவியை இழந்து மறுமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது என்பது மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தை நேரு அனுபவித்திருக்கிறார்.. ராஜாஜி அனுபவித்திருக்கிறார்.. இவர்களில் சிலர் ஒருவகையான வடிகாலை தேடி கொள்கிறார்கள்.. தனக்கு பிடித்தமான, தனது அறிவிற்கும், ஆற்றலுக்கும் பொருத்தமான, தனக்கு இணையான சிந்தனை கொண்ட - தன் மீது அக்கறையும் கொண்ட - தனக்கான சந்தோஷிக்கிற - தனக்காக துக்கப்படுகிற ஒரு பெண்மணியை உற்ற தோழியாக வரித்து கொள்கிறார்கள்.
உள்ளார்ந்த உணர்வுகள்
கோடிக்கணக்கான மக்களுக்காக இவர் இருந்தாலும், தனக்காக யாரும் இல்லையே என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது.. தனது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள, தேவைப்பட்டால் உள் நோக்கமில்லாத ஆலோசனை கூற, தனது உள்ளார்ந்த உணர்வுகளையும், அடியாழத்தில் புதைந்துபோன அந்தரங்கங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உயிர்தோழி தேவைப்படுகிறார். இதை செக்ஸை அடிப்படையாக கொண்ட நட்பு என்று கொச்சைப்படுத்திவிடக்கூடாது. அந்த வகையில், நேருவும், மவுன்ட்பேட்டனின் மனைவியும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்!
சொத்துக்கள்
அப்படியானால் 72 வயதில் மறுமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பெரியாருக்கு ஏன் தோன்றியது? என்பதை எண்ணி பார்க்க வேண்டும். திராவிடர் கழகம் அமோகமாக வளர்ந்துவிட்டது.. சொத்துக்களும் ஏராளமாக குவிந்துவிட்டன.. தனக்கு பிறகு சொத்துக்களை நேர்மையான முறையில் யார் பராமரிப்பது? முழுக்க முழுக்க கட்சிக்கும், இயக்கத்திற்கும் மட்டுமே அதை செலவிட போவது யார் என்ற கேள்வி பெரியாரின் மனதில் காலப்போக்கில் எழுந்தது.
இளமை
அப்போதுதான் மணியம்மையின் பெயரை யோசித்தார்.. அழகும், இளமையும் கொண்ட மாணவி.. தந்தை பெரியார் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்.. அவருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்.. அதனால்தான் வயது வித்தியாசத்தை பாராமல் அவரை மணம் செய்து கொள்ள முழுமையாக சம்மதித்தார்.. பெரியார் - மணியம்மை திருமணம் அவர்களது சொந்த ஆசாபாசங்களுக்காக அல்ல.. திராவிடர் கழகத்திற்காக.. அதன் இயக்கத்திற்காக நடந்த திருமணம் ஆகும். பணத்தையோ - சொத்தையோ காட்டி, விருப்பமில்லாத ஒரு இளம்பெண்ணை முதியவர் ஒருவர் கட்டாய திருமணம் செய்து கொள்வதை யாராலும் ஏற்க முடியாதுதான்..
நிராகரித்தார்
ஆனால் மணியம்மை விரும்பியே இதை ஏற்று கொண்டவர்.. மணியம்மை நினைத்திருந்தால், படித்த - செல்வாக்கான - செல்வம் நிறைந்த இளைஞரை மணம் முடித்திருக்கலாம்-. இளமைக்காலம் மகிழ்ச்சியுடனும் கழிந்திருக்கும்.. குடும்ப தலைவியாகி - குழந்தைகளுக்கு தாயாகி - பெண்மைக்குரிய அர்த்தத்தையும் பூர்த்தி செய்திருப்பார்... ஆனால் அதை மணியம்மை மனசார நிராகரித்தார்.. பெரியாரை மணந்து கொள்ளும் விருப்பம் அவருக்கு முழுமையாக இருந்தது.
நெல்சன் மண்டேலா
அதுமட்டுமல்ல.. ஒருவர் இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதும், கொள்ளாமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட உரிமை. இதில் யாருக்கும் தலையிடும் அதிகாரம் கிடையாது. 70 வயதான யாசர் அராபத்தும், 80 வயதான நெல்சன் மண்டேலாவும், பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் தன்னையும்விட மிகவும் வயது குறைந்த பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.. இவர்களை மக்களும் மனப்பூர்வமாக வரவேற்று அங்கீகரித்தனர்.
தியாகம்
பெரியாரை மணம் முடிக்க மணியம்மை எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார், இளமைக்காலத்திலேயே எத்தகைய சோதனைக்கு தன்னை அவர் உட்படுத்தி கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டால்தான் தன் தலைவனுக்காக ஒரு பெண் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்!