சுயமரியாதை, ஆளுமை திறனுடன் எனது செயல்பாடுகள் அமையும்.. பெரியார் பிறந்தநாளில் ஸ்டாலின் உறுதிமொழி
சென்னை: சுயமரியாதை, ஆளுமை திறனுடன் எனது செயல்பாடுகள் அமையும் என சமூக நீதி நாளில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். பெரியாரின் பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெரியார் பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூத்த அமைச்சர்களும் மலரஞ்சலி செய்தனர். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை முதல்வர் ஸ்டாலின் வாசிக்க மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த விழாவில் தலைமைச் செயலாளர் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அப்போது முதல்வர் ஸ்டாலின் வாசித்த உறுதிமொழியில், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை, ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செய்லபாடுகள் அமையும் என்று கூறி இந்நாளில் உறுதி ஏற்கிறேன் என வாசித்தார் ஸ்டாலின்.
சமுதாயத்தின் விடிவெள்ளியாம் சமூகநீதிப்போராளி தந்தை பெரியார் ஈரோடு மாவட்டம் வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17-9-1879ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். செல்வச்செழிப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதியப்பாகுபாட்டினை காண சகிக்காமல், சமூக நீதித்தேடி சளைக்காமல் போராடி களத்தில் அவர் பட்ட காயங்களும், அவமானங்களும் ஆயிரமாயிரம். இளம் வயதில் பல்வேறு அமைப்புகளில் தலைமை ஏற்றவர் காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக காங்கிரசில் இணைந்தாலும் தான் கொண்டிருந்த கொள்கை, லட்சியங்கள் ஈடேறிட வாய்ப்பில்லாது போனதால், அக்கட்சியில் இருந்து வெளியேறி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படவும், படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து, விழிப்புணர்வு பெறமுடியும் என்பதையே தன் லட்சியமாக கொண்டு, "குடியரசு" வார இதழ் தொடங்கி, சமுதாயத்தில் நிலவிவரும் வருணாசிரமத்தை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டுமே தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவை இரண்டும் அவரது இலக்குகளாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரின் சுயமரியாதை எனும் சுயசிந்தனையால் தமிழினம் இன்று தலைநிமிர்ந்துள்ளதோடு சிந்தனை தெளிவும் பெற்றுள்ளது. விடாது அவர் இடித்துரைத்த பகுத்தறிவினாலும், விதைக்கப்பட்ட சமூக நீதி கருத்துகளாலும் தமிழகம் தலை நிமிர்ந்து தன்னிறைவு பெற்று நிற்பதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏக்கத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
தந்தை பெரியாரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றுகின்ற வகையில் அறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சி பொறுப்பிலே அமர்ந்தபோது 'இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை' என்று கம்பீரமாக அறிவித்தார். தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதை திருமணச்சட்டம், கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்கப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார். அவரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் அருமைத்தம்பியான தலைவர் கருணாநிதி ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தார்.
Recommended Video
றிப்பாக, பெண்களுக்கு சம சொத்துரிமை சட்டம், பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, பகுத்தறிவு பகலவனாம் ஈ.வே.ராமசாமிக்கு 'பெரியார்' என்கின்ற பட்டம் வழங்கிய டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் ஆகியோரின் பெயர் தாங்கிய திட்டங்களாம் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கைம்பெண் மறுமண உதவித்தொகை, ஈ.வே.ரா.மணியம்மையார் ஏழை கைம்பெண் மகள் திருமண நிதியுதவி, பெரியார் கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், அனைத்து சாதியினரும் ஒன்றிணைந்து வாழும் சமத்துவபுரம் திட்டம் போன்ற பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி உள்ளார்.
திராவிட இயக்கத்தின் நீட்சியாகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதியின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியை நிலைநாட்டும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தியதோடு, 2 பெண் ஓதுவார்களையும் நியமித்து தந்தை பெரியாரின் கனவை நனவாக்கினார். தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும் 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு', சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளால் ஆண்டுகள் 143 கடந்தும் இன்றும் நம்மோடும், இனி வரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கவே இந்த சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.