டிசம்பர் 26.. வங்கக் கடல் பாடிய மெளன ராகம்.. கடலோர கிராமங்களின் முகாரி.. மறக்க முடியாத.. சுனாமி!
சுனாமி பேரழிவின் 14-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: 2004 டிசம்பர் 26, காலை 8.30 மணி... மிரட்டிக் கொண்டிருந்தது வங்க கடல்!
சற்று நேரத்திற்கெல்லாம் ஆந்திரா, கேரளா, லட்சத் தீவு, அந்தமான், பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் என ஐந்து மாநிலங்களிலும் கடல் மிரட்டியும் புரட்டியும் போட்டது.
இத்தனை இடங்களை சுனாமி தாக்கினாலும், பாதிப்பு என்னமோ தமிழகத்திற்குதான் அதிகம். உயிரிழப்பு சுமார் 8 ஆயிரம் என்று சொன்னார்கள். ஆனால் காணாமல் போனவர் பற்றிய விவரம், தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
உச்சக்கட்ட கொடூரம்
தமிழகத்தின் சென்னை, கடலூர், நாகை, குமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும், நாகையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேல் மக்களின் உயிர் பறிக்கப்பட்டிருந்தது. அதுவும் வேளாங்கண்ணி மாதா கோவில் பக்தர்கள் பலஆயிரம் பேர், கடலில் மூழ்கி உயிரிழந்திருந்தது உச்சக்கட்ட கொடூரம்.
பல்வேறு மாற்றங்கள்
ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டை சுனாமி பார்க்கவில்லை. அனைவரையுமே சரிசமமாக பாதித்தது. இன்றோடு இந்த கோரம் நடந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சுனாமி பேரலைகள் தாக்கிய பிறகு வங்கக்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குமரி கண்டம்
குறிப்பாக வங்கக்கடலின் நீரோட்ட திசையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. சுனாமி என்ற வார்த்தையே அப்போதுதான் முதன்முதலாக நம் மக்கள் அறிகிறார்கள். அதற்கு முன்பு குமரி கண்டம் அழிந்தது என்பதை கேள்விப்பட்டார்களே தவிர கண்ணெதிரே அழியும், மூழ்கும் தலைகளை அப்போதுதான் பார்த்தார்கள்.
அபரிமிதமான உதவிகள்
நீரில் மிதந்த உடல்களை காப்பாற்ற நல்லுள்ளங்கள் விரைந்தன.... கரை ஒதுங்கிய மனித உடல்களை அப்புறப்படுத்தவும் இதே மனித தெய்வங்கள் உதவின... குறிப்பாக உடல்களை மீட்பதில் இருந்து நிவாரணங்களை தந்து அவர்களை கை தூக்கி விட்டது வரை இளைஞர்களின் பங்கு அபரிமிதமானது.
சுழி போட்ட சுனாமி
பொதுவாக மீனவ மக்கள் யாருடனும் அவ்வளவாக நெருங்கி பழகமாட்டார்கள். ஆனால் சுனாமிதான் இதற்கு சுழி போட்டு ஆரம்பித்தது. 14 வருடங்களுக்கு முன்பு தங்கள் ரத்தங்களை இழந்தவர்களுக்கு மீனவர்கள் வருடா வருடம் அஞ்சலி செலுத்துவதைபோல, தங்களுக்கு அன்றைய நாளில் கடலில் இறங்கிய இளைஞர்களுக்கும் நன்றியை கூடவே உதிர்த்து வருகின்றனர்.
அணு உலை சோதனைகள்
ஆனால் இன்றுவரை தமிழகத்தில் சுனாமி ஏற்பட என்ன காரணம், சுனாமிக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?, கடற்கரைகளில் அணு உலை சோதனைகளை நடத்த யார் காரணம்? என்பதெல்லாம் தெரியவில்லை, அதை அறியவும் யாரும் முற்படவும் இல்லை. பறிபோன உயிர்களின் முன்னால் இந்த விவரங்களை அறிய விரும்பவும் இல்லை.
மவுனத்தின் உச்சம்
ஆனால் வணங்கும் கடலம்மாவின் கோபத்தையும், கடல் மவுனத்தின் உச்சத்தையும் உயிருள்ளவரை ஒருவரும் மறக்க மாட்டார்கள்.