நிபா வைரஸ் பாதிப்பு... கேரளாவில் கல்லூரி மாணவருக்கு தீவிர சிகிச்சை
சென்னை: கேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவரின், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனையில், மாணவருக்கு 'நிபா' வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் அந்த இளைஞருக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 86 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும்.
மேலும், நிபா வைரசால் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பி, கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் தாக்குதலுக்கென்று, பிரத்தியேக சிகிச்சைகள் எதுவும் இதுவரை இல்லை. அதனால், வைரஸ் தாக்கியவர்களை, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'நிபா' வைரசை சமாளிக்க மாநில சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, யாரும் அச்சப்பட தேவையில்லை என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதே போல், சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் வைரஸ் காய்ச்சல் கடந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.