தமிழகத்துக்கு வந்த 4,82,310 தடுப்பூசிகள்.. சென்னைக்கு 40,000 கொங்கு மண்டலத்துக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 4,82,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தன. மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமாகும். இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
கோல்டு செயினா இருக்குமோ!.. ஆசையாக கிஃப்டை பிரித்த மணமகள்.. பார்த்தவுடன் கோபம்.. வைரலாகும் வீடியோ
ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செல்லுவதில் மக்கள் மிகவும் தயக்கம் காட்டினார்கள். தடுப்பூசி மீதான பயமே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. போகப் போக மக்களிடம் தடுப்பூசிகள் மீதான பயம் குறைந்து விட்டது.
மத்திய அரசு பாகுபாடு
தற்போது மக்கள் மிக ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது தடுப்பூசி தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசியைத் தான் மாநிலங்கள் செலுத்தி வருகின்றன. ஆனால் தடுப்பூசியை பிரித்து கொடுப்பதில் மத்திய அரசு பாகுபாடு காட்டி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தடுப்பூசி தட்டுப்பாடு
நமது தமிழ்நாட்டிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 4,82,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தன.
சென்னைக்கு 40,000
இந்த தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டத்துக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 75,810 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. சென்னைக்கு மட்டும் 40,310 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு 61,500 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
சேலத்துக்கு எவ்வளவு?
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு 57,000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு 53,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு 48,000 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் ஏமாற்றம்
தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக சில மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. சில மையங்களில் குறைவான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போது தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.