ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை சென்னை வந்தது
சென்னை: ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை ரயிலில் சென்னை வந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பஞ்சலோக நடராஜர் சிலைக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யும் டீலரிடமிருந்து 5.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பணம் கொடுத்து ஆஸ்திரேலிய கேலரி வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலையை வாங்கி இருக்கிறது. அதை தனது கேலரியில் காட்சிக்கும் வைத்துள்ளது.
2012ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூரை போலீசார் கைது செய்தபோது, ஆஸ்திரேலிய கேலரிக்கு நடராஜர் சிலையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவர் மீதான வழக்கு தமிழகத்தில் நடந்துவருகிறது.
இதையடுத்து இந்தியா அந்த சிலையை திருப்பிக்கொடுக்குமாறு ஆஸ்திரேலிய கேலரியை கேட்டுக்கொண்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிலையை திருப்பி அளிக்க ஆஸ்திரேலிய அரசும் ஒப்புக்கொண்டது. 16ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த நடராஜர் சிலை ரூ.30 கோடி மதிப்புள்ள சிலையாகும். இந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி வந்த நிலையில், டெல்லியில் இருந்து ரயில் மூலம் இன்று காலை சென்னை வந்தது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க சிலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கல்லிடைக்குறிச்சிக்கு சிலையை கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழு சிலையை மீட்டுள்ளது. வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.