இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்!
ரஜினிக்கு அதிமுக உடனுக்குடன் பதிலடி தந்து வருகிறது
Recommended Video
சென்னை: "இது லிஸ்ட்டிலேயே இல்லையே.." என்று முதல்வன் படத்தில் ஒரு வசனம் வருமே.. அந்தக் கதையாக மாறியுள்ளது ரஜினிகாந்த் பேச்சுக்கு அதிமுக கொடுத்து வரும் பதிலடிகள். இதை ரஜினி ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.. தலைவர் பேச்சு அவருக்கு எதிராக போய்க் கொண்டிருக்கே என்று அவர்கள் குழம்பிப் போயுள்ளனராம்.
ரஜினியை ஆளுக்கு ஒரு பக்கமாக வாங்க வாங்கன்னு அரசியலுக்கு இழுத்துக் கொண்டுள்ளனர். எல்லா பக்கமும் திரும்பி சிரித்தபடி சமாளித்து கொண்டிருக்கிறார் ரஜினி. இதுதான் உண்மை.. கமல் பாணியில் சொல்வதானால் இதுதான் நிதர்சனம்.
எனவே அவர் எப்போது கட்சி ஆரம்பிப்பார். அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கும். தேறுமா, தேறாதா.. யாருடன் கூட்டணி சேரும் என்பதெல்லாம் கற்பனையில் கூட தீர்மானிக்க முடியாத அளவுக்கே இப்போதைய நிலவரம் உள்ளது.
விவாதங்கள்
வழக்கமாகவே ரஜினி பேசும் பேச்சு எல்லாமே சர்ச்சையில்தான் போய் முடிகின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பேசி வருவது பலத்த விவாதங்களையும், சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது. ரஜினிக்கு புது கலர் பூசும் விதமான பேச்சுக்களாகவும் இவை உள்ளன. அதாவது நான் காவி கலர் அல்ல என்று ரஜினியே மக்களுக்கு சொல்லிக் கொள்வது போல உள்ளது அவரது சமீபத்திய பேச்சுக்கள்.
முதல்வர் - அதிசயம்
இந்த நிலையில்தான் அவரது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த பேச்சு வந்து சேர்ந்தது. கமல் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வந்தது அதிசயம், அற்புதம்.. என்று பேசப் போக அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. எந்த இடத்தில் பேசினால், என்ன மாதிரியாக அது வைரலாகும் என்று தெரிந்துதான் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
பெருந்தலைகள்
அவரது பேச்சால் அதிமுகவினர் கொதிப்படைந்தனர்... கடுப்பானார்கள்.. ஆனால் அதிமுக பெருந்தலைகள் அதை லாவகமாக எதிர் கொண்டு ரஜினிக்கே திருப்பி போட்டனர். அதாவது "ரஜினி உண்மையில் எடப்பாடியாரை பாராட்டியே பேசியுள்ளார். அவர் சொன்ன அதிசயம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறது என்பதுதான். எனவே ரஜினியை நாம் பாராட்டியாக வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது" என்று சொல்லவும், ரஜினி ரசிகர்கள் குழம்பி விட்டனர்.
உற்சாகம்
குறிப்பாக மருது அழகுராஜ், ரஜினி பேச்சை வரிக்கு வரி பாராட்டியுள்ளார். ரஜினியின் பேச்சை அதிமுகவினர் வரவேற்க வேண்டும். எடப்பாடியார் அடுத்த 2012ம் ஆண்டிலும் அதிசயம் நிகழ்த்தப் போகிறார் என்றே ரஜினி கூறியுள்ளார். அவர் பேசியதற்கு அதுதான் அர்த்தம் என்று கூறப் போக அதிமுகவினர் உற்சாகமாகி விட்டனர். ரஜினி ரசிகர்கள் இன்னும் குழம்பிப் போய் விட்டனர்.
நிச்சயம் நடக்கும்
இதோ இப்போது மீண்டும் ரஜினி குழப்பமாக பேசியுள்ளார். அதை முதல்வர் எடப்பாடியாரே லாவகமாக திருப்பிப் போட்டு ரஜினி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். ரஜினி சொல்லும் அதிசயம் நடக்கும். அது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவது என்பதுதான். அந்த அற்புதம் நிச்சயம் நடக்கும் என்று முதல்வரே இன்று கூறி விட்டார். இதை ரஜினியே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
தர்மசங்கடம்
அது மட்டுமா.. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு படி மேலே போய், தமிழர்கள் ரஜினி என்ற வெற்று பிம்பத்தை அடித்து நொறுக்கி அதிசயம் நிகழ்த்தப் போகிறார்கள். அதுதான் 2021ல் நடக்க்ப போகிறது என்று கூற ரஜினி ரசிகர்களுக்கு இப்போது தர்மசங்கடம் அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்
குழப்பம்
ரஜினி என்ன பேசினாலும், எப்படிப் பேசினாலும் உடனுக்குடன் கேட் போடப் படுவதால் எப்படி இதை சமாளிப்பது என்ற குழப்பம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், ரஜினி இப்படி பேசுவதற்கும் கூட காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது தன்னை சுற்றி விவாதம் இருந்து கொண்டே இருந்தால்தான் நல்லது என்று அவருக்கு யாரேனும் ஆலோசனை கொடுத்துள்ளனரா என்ற கேள்வியும் கூட எழுகிறது.
என்னவோ, எப்பத்தான் இந்த 2021 வருமோ என்றுதான் நமக்கு கேட்க தோன்றுகிறது!