தனியா நிற்போம்.. "அம்மா" ஆசி நம்மை கரை சேர்க்கும்.. அதிமுகவில் திடீர் குரல்
பாஜகவுடன் இனியும் உறவு வேண்டாம் என கோரிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக பாஜகவை உதறி விட்டு தைரியமாக தனியாக போட்டியிட முன்வர வேண்டும். ஜெயலலிதா மீது அன்பும், பாசமும் உள்ள தமிழ்நாட்டு மக்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள். இரட்டை இலையும் இணையும்போது நிச்சயம் வெற்றி நமதே என்று அதிமுகவுக்குள் குரல் கேட்கத் தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா விசுவாசிகள் இந்த குரலை உரத்து எழுப்ப ஆரம்பித்துள்ளனர். பாஜகவுடன் கை கோர்த்து தேர்தல் களம் கண்டால் சிறுபான்மையினர் நம்மை விட்டு விலகி விடுவார்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதாதான் நமக்கு முன்னோடி. அவர் வகுத்துக் கொடுத்த வழியில் நாம் பயணிப்பதே சரியானதாக இருக்கும் என்று குரல் கிளம்பியுள்ளதாம்.
ஜெயலலிதா எப்படி தைரியமாக தில்லாக செயல்பட்டாரோ அதே போல செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் பம்மிப் பயந்து கொண்டிருந்தால் மக்களால் நாம் முழுமையாக நிராகரிக்கப்படும். மாறாக தைரியமாக இறங்கி அடித்தால் நிச்சயம் வெற்றிதான் என்றும் பேச்சு கிளம்பியுள்ளதாம்.
மழுங்கிப் போன அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மழுங்கிப் போய் விட்டது. பழைய பலத்துடன் அது நிச்சயம் இல்லை. தினகரன் பக்கம் தொண்டர்களும், அதிமுக பக்கம் நிர்வாகிகளும் என கட்சி பிளவு பட்டுக் கிடக்கிறது. அதேசமயம், அதிமுகவினர் மத்தியில் பழைய நம்பிக்கை பட்டுப் போகாமல்தான் உள்ளது. அவர்களுக்கு இப்போது இருக்கும் பெரிய இடையூறு என்றால் அது பாஜக மட்டுமே.
கைகளுக்கு காப்பு
அதிமுகவை சுதந்திரமாக செயல்பட விடாமல் பாஜகதான் தடுத்து வருவதாக, இயக்கி வருவதாக ஒரு பேச்சு உள்ளது. அதற்கேற்பதான் பல காரியங்களும் நடைபெறுகின்றன. இந்த நிலையில்தான் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அதை விட முக்கியமாக இத்தனை சீட் எங்களுக்கு வேண்டும் என்று அதிமுகவை பாஜக நெருக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
கோபத்தில் அதிமுகவினர்
இது மேல் மட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு எப்படியோ தெரியாது, ஆனால் கீழ் மட்ட அளவில் அதிமுகவினரை கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. பாஜகவுக்கு இங்கு அடிப்படையே கிடையாது அவர்கள் நம்மை நிர்ப்பந்திக்கிறார்களா. அம்மா இருந்திருந்தால் இப்படிப் பேச முடியுமா என்று அவர்கள் கோபப்படுகிறார்கள்.
ஜெ வழியில் செல்வோம்
அம்மா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதே போல நாமும் செயல்படுவோம். அதிரடியாக இறங்குவோம். தனியாக நிற்போம், பாஜக கூட்டணி நமக்குத் தேவையில்லை. தைரியமாக தேர்தலை சந்திப்போம். நிச்சயம் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளும் நமக்கே கிடைக்கும். ஜெயலலிதா செய்த நல்லதை தமிழக மக்கள் மறக்கவில்லை. அதன் பலன் நமக்கே கிடைக்கும் என்று கூற ஆரம்பித்துள்ளனராம் அதிமுகவினர்.
கைப்பாவை
ஒரு பக்கம் பாஜக வசம் மாட்டிக் கொண்டு, இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு மாநில அரசு கூஜா, மத்திய அரசின் கைப்பாவை என்ற ஏகவசனத்துக்கு ஆளாகும் துர்நிலையும் அதிமுகவுக்கு ஏற்பட்டது. இப்போது இதனை உடைத்தெறியதான் இரு கட்சிக்குள்ளும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
கூட்டணி கட்சிகள்
குறிப்பாக 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக மீதான பார்வை அதிமுக தரப்புக்கு சற்று மாறிதான் இருக்கிறது. இதை தவிர தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை கூடி இருப்பதையும் அதிமுக நன்றாகவே உணர்ந்து வருகிறது. ஏற்கனவே அதிமுக மீதான அதிருப்தி மக்களுக்கு இருக்கிறது. இதில் பாஜக மீதான வெறுப்பும் கூடி உள்ளது. இன்னமும்கூட பாஜகவுடன் கூட்டணியை நீடித்தால் அது மேலும் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
வழக்கை சந்திப்போம்
ஒரு வேளை பாஜகவை உதறும் முடிவுக்கு வந்தால் நம் மீது வழக்குகள் பாயலாம். பாயட்டுமே. ஜெயலலிதா சந்திக்காத வழக்குகளா, அவர் போகாத கோர்ட்டா இல்லை பார்க்காத எதிரிகளா. அதை விடவா நமக்கு வந்து விடப் போகிறது. அதையும் பார்த்து விடலாம் என்றும் அதிமுகவினர் படு தெளிவாக பேச ஆரம்பித்துள்ளனராம்.
சிறந்த வெற்றி கிடைக்கும்
ஜெயலலிதா ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் கூட்டணி சேரும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது எதற்கு என்பதை அவரே பின்னர் மறைமுகமாக உணர்த்தினார். இன்று விஜயகாந்த் இருக்கும் இடம் தெரியவில்லை. அதேபோல நாமும் தனியாக நிற்போம். எதிரிகள் தானாகாவே ஓடி விடுவார்கள் என்றும் அதிமுகவினர் கருதுகிறார்களாம்.
எல்லாம் சரி, கட்சித் தலைமை என்ன கருத்தில் உள்ளது என்று தெரியலையே