சாமானிய மக்களுக்கு சாட்டையடி.. தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு
சென்னை: தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்துள்ளது. மத்திய அரசு தரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தமிழகத்தின் மொத்த தேவையில், வெறும் 24 சதவிகிதமாக இருப்பதால் தமிழகத்தில் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு தரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்து வழங்கப்பட உள்ள மண்ணெண்ணெய் அளவு குறித்து, அனைவரும் அறியும்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரப்படுத்துமாறு உணவுப் பொருள் வழங்கல்துறை, அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, காஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 6 லிட்டருக்குப் பதில், 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளது. ஒரு சிலிண்டர் உள்ளோருக்கு 2 லிட்டருக்குப் பதில், ஒரு லிட்டர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதனிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவோ, இதற்கு வேறு ஒரு விளக்கம் சொல்கிறார். அவர் கூறும் விளக்கம்: தமிழகத்தில்தான் காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். எனவே மண்ணெண்ணெய் வழங்கும் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது என்றார் அவர்.