ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம்... மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்... ராமதாஸ் அறிக்கை
சென்னை: காவிரி பாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட, மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணெய் குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண் "மை" வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என விவசாயத்தை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய்ப்பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது என்றும் கூறினார்.
உச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ.. லேட்டஸ்ட் தேர்தல் ஆணையம்.. தன்னாட்சி அமைப்புகள் தடுமாற்றம் ஏன்?
இப்படி விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிப்பதை விட விவசாயிகள் என்ற இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்து விடலாம். கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய்ப்பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தி விடும் எனவே இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சில இடங்களில் விவசாயிகளின் கடுமையான போராட்டத்தினால், குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, மற்ற இடங்களில் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
ஓஎன்ஜிசி - கெயில் நிறுவனங்களின் செயல் விவசாயத்தை அழிக்கும் செயல் என்பது ஒருபுறமிக்க, மிகப்பெரிய நம்பிக்கை துரோகமும் ஆகும். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அதிக எண்ணிக்கையில் எண்ணெய் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.