அடுத்த குறி விஜயபாஸ்கரா.. இதுக்கெல்லாம் காரணம் "அவர்"தானாமே.. பாஜகவின் அடுத்தடுத்த ஏவுகணைகள்
அதிமுகவுக்கு எதிராக பாஜக காய் நகர்த்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: அடுத்த குறி விஜயபாஸ்கர்தானாம்.. அதிமுகவுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகளை தந்து வரும் நிலையில், பாஜகவின் அழுத்தங்கள் கூடி கொண்டே வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுகவுக்கு 2 முக்கிய தர்மசங்கடங்கள் சேர்ந்துள்ளன.. ஒன்று விஜய் வாய் விட்டு கேட்டு விட்டார் என்பதற்காக அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. 100 சதவீதம் தியேட்டர் சீட்டுகளுக்கு அனுமதி அளித்தால் அதன் பாதிப்புகளும், விளைவுகளும் என்னவென்பது முதல்வருக்கும் தெரியாமல் இருந்திருக்காது.
எனினும் விஜய்க்காகவே இப்படி ஒரு ரிஸ்க் எடுத்த நிலையில், இப்போது மத்திய அரசிடம் அதிமுக அரசு குட்டு படும் நிலைக்கு ஆளாகி உள்ளது.. 50 சதவீத இருக்கைதான் என்ற தன்னுடைய முடிவையும் திட்டவட்டமாக உள்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவம் வெடித்துள்ளது.. அதிமுக பிரமுகர் என 3 பேரை சிபிஐயே கைது செய்துள்ளதும் மிகப்பெரிய அதிர்ச்சிதான்.
அதிரடி
இவர்களை கைது செய்தவர்களை வேண்டும் என்று இந்த 2 வருஷத்தில் எதிர்க்கட்சிகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தின.. கோரிக்கைகளையும் முன்வைத்தன.. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில்தான், சிபிஐ இந்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.
அதிரடிகள்
இந்த 2 அதிரடிகளும் ஏதோ ஒரு விஷயத்தை புரியவைப்பது போலவே உள்ளன.. இதெற்கெல்லாம் காரணம், அன்று கேபி முனுசாமி பேசிய பேச்சுதான் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் ஒருசுமூக முடிவு எட்டப்படாத நிலையில், இதெல்லாம் எதற்கான குறியீடு என்பது தெரியாத நிலையும் உள்ளது.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.
குட்கா
அதன்படி, அமைச்சர்கள் மீதும் கை வைக்க முடிவு பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அதில் முதல் நபரே டாக்டர் விஜயபாஸ்கர்தான்.. குட்கா விவகாரத்தில் மறுபடியும் சம்மன் அனுப்ப போவதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே இதே போல சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில், விஜயபாஸ்கரும் பலமுறை நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அமைச்சர் பதவி போய்விடும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த நிலையில், அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை... அதற்கான அறிகுறியே அப்போது தென்படவில்லை.
சம்மன்
அதற்குள் கொரோனா விவகாரமும் தமிழகத்திற்குள் வந்துவிடவும், தன் அதிரடிகளை காட்டி "டாப்பில்" மேலே வந்தார் விஜயபாஸ்கர்.. அத்துடன் அந்த வழக்கு, விசாரணை சம்மன் இதெல்லாம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்த சமயத்தில்தான் மறுபடியும் இவர் பேச்சு அடிபடுகிறது.. அமித்ஷாவே சிக்னல் தந்துவிட்டததால்தான் இப்படிம் அதிரடிகள் நடக்கிறதாகவும் சொல்கிறார்கள்.
திமுக
இதெல்லாம் உண்மையா, அல்லது பரபரப்புக்கு வேண்டுமென்றே கிளப்பிவிடக்கூடிய விஷயங்களா என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் சரி, அதிமுகவை ஆட்டம் காண வைப்பதற்காக, பாஜக எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது அப்படியே யூடர்ன் அடித்து திமுக வெற்றிக்கு வந்து உதவும் என்பதே யதார்த்தம்!