விடாமல் நீண்ட அதிமுக - கோயல் பேச்சுவார்த்தை.. பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்பதால் இழுபறி!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக, அதிமுக இடையே இன்று இரவு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்தையும் தாண்டி பேச்சுவார்த்தை நடைபெற்ரது. பாஜக திடீரென கூடுதல் தொகுதிகள் கேட்பதாகவும், அதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இரவு சென்னை வந்தார். வந்தவுடன் நேராக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்கு விரைந்தார். அங்கு வைத்து அதிமுக தலைவர்களுடன் அவர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கினார். அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை, தொகுதிகள் என்னென்ன என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் கூறின.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பியூஸ் கோயல் பேசியதாவது:
பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்திருக்கிறேன் என்றும் கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும் என்றும் கூறினார்.
தமிழக மக்களின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும். தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், மக்கள் நலனுக்கு உகந்த கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
தமிழகத்துடன் உறுதியான உறவில் இருக்கிறோம். மத்தியில் அடுத்த அமையும் ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது; மக்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென பிரதமர் அக்கறை கொண்டுள்ளார் என்றும் கூறினார்.