பாஜகவின் முதல் எதிரி யாரு தெரியுமா.. திருமாவளவன் கடும் தாக்கு.. வீரமணி பகீர் புகார்
சென்னை: பாஜகவின் முதல் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இடதுசாரி கட்சிகளை அழிக்க வேண்டும் என சங் பரிவார் அமைப்புகள் நினைக்கின்றன என்று திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். மிக மிக சிறுபான்மையினர் ஆக உள்ள சமூகங்களை ஒருங்கிணைப்பு செய்து, அவர்களுக்கு இந்து உணர்வை பாஜக ஊட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திரிபுராவில் இடதுசாரிகள் மீது பாஜவினர் வன்முறை நடத்துவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில், இடதுசாரி ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி அருகே அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்- 3 பேர் பலி; 20 பேர் படுகாயம்
இதில், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஐ எம்எல் செயலாளர் நடராஜன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனித உரிமை கூட்டமைப்பின் பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரிபுரா வன்முறை
இந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய கே.பாலகிருஷ்ணன், "திரிபுராவில் பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்த பாஜக தற்போது அங்கு வன்முறையைக் கட்டவழித்து வருகிறது. திரிபுராவில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தை அராஜக வன்முறை அரசியலுக்கு சோதனை களமாக பாஜக மாற்றி வருகிறது. ஜனநாயக அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்திய அரசியலில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இடமிருக்காது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
கடை அடைப்பு
இவரைத் தொடர்ந்து பேசிய முத்தரசன், "மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடைபெறகிறது. இதற்கு அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். இதனை வெறும் திரிபுராவில் நடைபெறும் பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. பாஜகவினர் எங்கு வேண்டுமானாலும் இதனை நடத்துவார்கள். இந்த வன்முறையை அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் அதனையும் எதிர்கொள்ள தயார்.
எதிர்க்கட்சிகள்
பாஜக ஆர்.எஸ்.எஸ். சரிவை சந்தித்து வருகிறது, இதனால்தான் வன்முறையை கையில் எடுத்துள்ளது. நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழகத்தில் ஒரே மேடையில் எதிர்க்கட்சிகள் திரண்டு உள்ளன. இதேபோல், பாஜகவை எதிர்ப்பதில் நாட்டுக்கு முன்னுதாரணமாக தமிழகம் அமைய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்
கொரோனாவை விட கொடியவர்கள்
பின்னர் பேசிய கி.வீரமணி, "கொரோனாவை விட கொடியவர்கள் மதவாதிகள். இது போன்ற வன்முறைகளுக்கு இடம் கொடுத்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும், பாசிசம் நாட்டை ஆளும் நிலை ஏற்படும். எங்கோ திரிபுராவில் தான் நடைபெறுகிறது என நாம் இருந்துவிட முடியாது. தெருக்கோடியில் தீ வைக்கப்பட்டால் அது நம் வீட்டுக்கும் வரும் என்பதை உணர வேண்டும். 20 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்காரை அவரது தொகுதிக்கே செல்லவிடாத அளவுக்கு அராஜகத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.
எங்களுக்கும் தெரியும்
பாஜகவுக்கு எதிரான இந்த அணி நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி, நாளைய ஊராட்சி தேர்தல் வரை தொடரும். இது கொள்கை ரீதியாக சேர்ந்திருக்கும் அணி இதனை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. பாஜகவைப் பற்றி பேசும் போது மிருக பலம் என்று சொன்னார்கள். மிருகங்களை எப்படி பழக்க வேண்டும் என்று தெரித்தவர்கள் இந்த மேடையில் உள்ளவர்கள். அந்த மொழி எங்களுக்கும் தெரியும், வேண்டாம் என்று இருக்கிறோம். வன்முறை வேண்டாம் என ஜனநாயக பாதையில் வந்துள்ளோம்" என்று பேசினார். மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துக்களை ராணுவமயமாக்குவதாகவும், ராணுவத்தை இந்து மயமாக்குவதாகவும் வீரமணி குற்றம்சாட்டினார்.
கம்யூனிஸ்ட்
திருமாவளவன் பேசுகையில், "திரிபுராவில் பாஜக நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் முதல் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இடதுசாரி கட்சிகளை அழிக்க வேண்டும் என சங் பரிவார் அமைப்புகள் நினைக்கின்றன. தமிழகத்தில் அவர்கள் கால் ஊன்ற முடியாது என்றாலும் தற்போது ஒன்றிரண்டு இடங்களில் கால் பதித்து வருகின்றனர்.
பாஜக மீது தாக்கு
மிக மிக சிறுபான்மையினர் ஆக உள்ள சமூகங்களை ஒருங்கிணைப்பு செய்து, அவர்களை இந்து உணர்வை ஊட்டி வருகிறார்கள். சாதிகளை வளர்ப்பதன் மூலம் இந்து உணர்வை எழுப்பலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். இது திரிபுரா பிரச்சனை, கம்யூனிஸ்ட் பிரச்சனை என ஒதுங்கி இருக்க முடியாது. 2024 தேர்தலுக்கு முன் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் பொறுப்பு இடது சாரிகள் இடம் உள்ளது. 2024இல் பாஜகவை வீழ்த்துவதில் இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய பங்குள்ளது" இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்,