21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நல்லடக்கம்
மதுரை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழ்நாடு வீரர் லட்சுமணின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமணன் உட்பட மூன்றுபேர் வீரமரணமடைந்தனர். சில வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து இந்திய ராணுவம் எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வெறியாட்டம்- பயங்கரவாதிகளால் பீகார் தொழிலாளர் சுட்டுக் கொலை
தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருந்த ராணுவ முகாமில் கடந்த 11ம் தேதி அதிகாலையில் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் ஒன்று அரங்கேறியது. இதன் காரணமாக 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அதேபோல, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழப்பு
இந்த தாக்குததில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரையின் டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் ஆவார். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும்பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயிரிழந்த லட்சுமணின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து வெளியிட்டிருந்த இரங்கல் குறிப்பில், "ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தற்கொலைப்படைப் பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்கள் வீரமரணம் எய்திய நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது. இன்னுயிர் ஈந்து நாட்டைக் காத்த நாயகர்களுக்கு என் வீரவணக்கம்!" என்று கூறியிருந்தார்.
இறுதி மரியாதை
மேலும் லட்சுமணின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நண்பகல் அவரது உடல் மதுரைக்கு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்கள், மாவட்ட ஆட்சியர், மேயர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சாலை மார்கமாக ஆம்புலன்சில் வீரரின் உடல் திருமங்கலம் வழியாக டி.புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இங்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லட்சுமணின் பெற்றோரிடம் தேசிய கொடி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிலைமை
கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் சம்பவம் இது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜம்முவின் பிற பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் சில பகுதிகளில் மட்டும் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். தற்போது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் லக்ஷ்ர்-இ-தொய்பா இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்..