எடப்பாடி பழனிசாமி முதல்வராகி 3 ஆண்டுகள்... தயாராகிறது சாதனை மலர்
சென்னை: தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வரும் பிப்ரவரி மாதத்துடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது.
அதையொட்டி அவர் முதல்வராக பதவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகள், உள்ளிட்டவைகள் அடங்கிய சாதனை மலர் ஒன்றை தமிழக அரசு தயார் செய்து வருகிறது.
தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் தயாரிக்கப்படும் அந்த சாதனை மலரை பார்த்து பார்த்து வடிவமைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
3 நாட்களில் நடந்த 3 விஷயம்.. புது வருடத்தில் புது பிளான் போடும் பாமக.. அதிர்ச்சியில் அதிமுக கூட்டணி!
முதல்வர் எடப்பாடி
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று வரும் பிப்ரவரி மாதத்துடன் மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. இதனால் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை வெகுவிமரிசையாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சாதனை மலர் தயாரிக்க கூறியுள்ளார்.
தமிழரசு அச்சகம்
தமிழக அரசுக்கு சொந்தமான தமிழரசு அச்சகத்தில் சாதனை மலர் தயாராகி வருகிறது. இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சகம். இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயார் செய்யும் பணி முடிந்து அதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.
எடப்பாடியார்
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பொன்மொழிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பொன்மொழியும் இந்த சாதனை மலர் புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாம். இதற்காக ஒரு தனி டீமே அதனை தொகுத்துக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வெற்றிக்கரமாக
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக சசிகலா அறிவித்த போது, மூன்று மாதம் தான் இவரால் ஆட்சி நடத்த முடியும் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில், அனைத்தையும் தவிடுபொடியாக்கி 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.