ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை... தேர்தல் ஆணையம்
வேலூர் மக்களவை தொகுதியில் மட்டுமே தேர்தல் ரத்து... குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. பரப்புரை ஓய்ந்த சில மணி நேரங்களில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை இல்லை எனவும், வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுத்துள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனை குறித்து அறிக்கை அளித்து விட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட சதி என்றும், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். தேர்தலை ரத்து செய்வதற்கு முன் 2 வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.