மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும், வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
தகிக்கும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.