ஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு
ஜெகத்ரட்சகனை கைது செய்ய கூடாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது
சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை வரும் ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.. ஜெகன்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்... அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை ஹைகோர்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. இதில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோரும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ம் தேதி சிபிசிஐடி போலீசாரின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர்.. அதே போல கடந்த 12 ம் தேதி சிபிசிஐடி போலீசார்,ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.
முகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி!
பிறகு, இந்த வழக்கில் சிபிசிஐடி சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை வழக்கில் தொடர்புடைய ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
சிபிசிஐடி போலீசார் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது..
தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டதோடு, இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.