மழை வருது மழை வருது..குடைய கொண்டு போங்க மக்களே! இன்று ‘இந்த’ பகுதிகளில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்
கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில், காமாட்சிபுரம் (திண்டுக்கல்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 3, பாப்பாரப்பட்டி KVK (தருமபுரி), செருமுள்ளி (நீலகிரி) தலா 2, சின்கோனா (கோயம்புத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 1 சென்டி மீட்டர் என மழை பெய்துள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை
24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 24, 25 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.