தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை; தேனி, நீலகிரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, சேலம் உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் கனமழை தொடரும் என்றும், நாளை மறுநாள் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடடே! என்ன ஆச்சரியம்...நம்ம தமிழ்நாடா இது...பிப்ரவரியிலும் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் மழை!
எப்படி மழை இருக்கும்
22ம் தேதி, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும். 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும். 24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் எப்படி
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூரில் வெளுத்த மழை
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, கடலூரில் தலா 19 செமீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியில் தலா 10 செமீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்மாதேவி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய ஊர்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
பழனியிலும் மழை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 செமீ மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், விழுப்புரம் மாவட்டம் வானூரில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேலம் மாவட்டம் சங்கரி துர்க் , திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.