செட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமான செட்டிநாடு அறக்கட்டளை குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் குதிரை பந்தயங்கள் நடப்பது வாடிக்கையானது. இதில், பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களின் பெயர் மற்றும் குதிரைகளின் விவரம் குறித்து நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், மறைந்த எம்ஏஎம். ராமசாமியின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பதிவு செய்ய ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், அறக்கட்டளை குதிரைகளை பந்தயத்தில் பங்கேற்க அனுமதிக்க முடியாதென மறுத்து, ரேஸ் கிளப் நிர்வாகம் 2019 டிசம்பர் 27-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமசாமி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ். சித்திரையானந்தம் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை இருக்க முடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தச் செய்து 2020-21ம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அதேபோல, அறக்கட்டளை குதிரைகளுக்கு எம்ஏஎம். ராமசாமிக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத் துணியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.