மூச்சுக்கு மூச்சு அம்மா ஆட்சின்னு சொல்றீங்க.! இத கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா.. டிடிவி கேள்வி
சென்னை: அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது வேதனை அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மீண்டும் பழையபடி அம்மா மருந்தகங்கள்செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
அம்மா மருந்தகங்கள் மூடப்படுவது தொடர்பாக டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழை, எளிய மக்கள் பயன்பெற புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள், அடுத்தடுத்து மூடப்பட்டு வரும் செய்தி வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
தரமான மருந்துகளை, குறைவான விலையில் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கடந்த 2014 -ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்த இந்த மருந்து கடைகளால் மக்கள் பெரிதும் பயன் பெற்றனர்.
ஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா?... திருமாவளவன் நறுக் பதில்
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அம்மா மருந்தகங்கள் படிப்படியாக பொலிவிழந்துள்ளன. மூச்சுக்கு மூச்சு அம்மாவின் ஆட்சியை நடத்துவதாக சொல்லும் பழனிசாமி அரசு, அம்மா மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையும், உரிய நேரத்தில் அளிக்கப்படாததால் அவர்கள் மருந்துகளை விநியோகிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். மேலும் காலாவதியான மருந்துகளைத் திருப்பி கொடுத்தாலும், அதற்குரிய பணத்தை மருந்து நிறுவனங்கள் தருவதில்லை.
அந்தத் தொகையை மருந்தாளுனர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் அம்மா மருந்தகங்களில் பணியாற்றுகிற மருந்தாளுனர்கள் விரக்தியில், வேலையை விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலட்சியமான நிர்வாகத்தால், தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் அடுத்தடுத்து அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் பிற இடங்களிலுள்ள அம்மா மருந்தகங்களும் இதே நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்ய வேண்டிய கூட்டுறவுத்துறை அமைச்சரோ கண்டும் காணாமல் இருக்கிறார்.எனவே அம்மா மருந்தகங்களை மீண்டும் பழையபடி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.