வாசன் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம்... சைக்கிள் கிடைக்காததால் நிர்வாகிகள் ஏமாற்றம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு சைக்கிள் சின்னத்தை வாசன் பெற்றுவிடுவார் என எதிர்பார்த்த அவரது கட்சி நிர்வாகிகள் இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இருப்பினும், தென்னந்தோப்பு சின்னம் ஊரகப்பகுதியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு கைகொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் த.மா.கா. தலைமை நிர்வாகிகள்.
ஜெ. நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை... துபாயில் இருந்து பொறியாளர்கள் வருகை
அதிமுக கூட்டணி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை வழங்கும் என எதிர்பார்த்தனர் அந்தக் கட்சியினர். ஆனால் தென்னந்தோப்பு சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்கியுள்ளது.
மீண்டும் தோப்பு
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த த.மா.கா. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் அதே வரலாறு அந்தக் கட்சிக்கு திரும்பியுள்ளது. இதனிடையே மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் மட்டும் போட்டியிட்ட த.மா.கா. ஆட்டோரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகிகள் ஏமாற்றம்
த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை பெற ஜி.கே.வாசன் கடுமையாக முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சிகள் ஏதும் பலன் கொடுக்கவில்லை. ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு ஒரு சின்னத்தைக் கூட பெற முடியாத நிலையை நினைத்து நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பரிச்சயம்
இது தொடர்பாக நம்மிடம் பேசிய த.மா.கா. நிர்வாகி ஒருவர், தென்னந்தோப்பு சின்னத்தை நாங்கள் வரவேற்கிறோம். கிராமப்புற மக்கள் மத்தியில் சின்னம் எளிதாக சென்று சேரும். ஆகையால் இந்தச் சின்னம் த.மா.கா.வுக்கு சாதகமாகத் தான் இருக்கிறது என்றார்.