அதிமுக-பாஜக இடையே தொடரும் லடாய்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டல், மோதல்
சென்னை: பாஜகவும், அதிமுகவும் இணக்கமாக இருப்பதாக வெளி உலகுக்கு தெரிந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்கின்றனர் அந்த இரு கட்சிகளின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பாஜகவிடம் அனுசரனையாக நடக்க தொடங்கிய அதிமுக, அதன் பிறகு தொடர்ந்து மத்திய பாஜக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ஆதரித்து ஏற்றுக்கொண்டது. இதனால் பாஜக மேலிடம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தது. அதிமுக மூலம் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைத்துவிடலாம் என நம்பிக்கை கொண்டது.
ஆனால், அதிமுகவோ பாஜகவின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்படுவது டெல்லியையும், இங்கிருக்கும் பாஜக தலைவர்களையும் உஷ்ணமாக்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்கிறது என்றால் அதற்கு நாம் தான் காரணம், இருப்பினும் அந்த நன்றியை அவர்கள் மறந்துவிட்டார்கள் என தமிழக பாஜக தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இடைத்தேர்தல்: அதிமுகவை ஆதரிக்க பாஜக விதித்த நிபந்தனை 5 மேயர் பதவி ப்ளஸ் 35% இடங்கள்..
மோடியையும், அமித்ஷாவையும் நேரில் சந்தித்தால் மட்டும் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் , நடிக்கின்றனர், அதற்கு பின்னர் தங்கள் வேலையை காட்டத்தொடங்குகின்றனர் என்பது தமிழக பாஜகவின் வாதம். இது தொடர்பாக பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது, மோடியின் ஆதரவு வேண்டும், ஆனால் பாஜக வேண்டாம் என்கிற வகையில் அதிமுக செயல்படுகிறது.
இதை இந்த இடைத்தேர்தல் மூலம் அனைத்து நிர்வாகிகளும் நன்கறிந்து கொண்டோம். பிரச்சாரத்திற்கு எங்கள் யாருக்கும் அழைப்பில்லை. சமத்துவ மக்கள் கட்சியை விட நாங்கள் எந்தவிதத்தில் குறைந்துவிட்டோம் எனத் தெரியவில்லை. பாஜகவினரை பிரச்சாரத்திற்கு அழைக்கத் தயங்கும் அமைச்சர்கள், பிற்கு எதற்கு கூட்டணி வைத்து மோடியை ஏமாற்றுகிறார்கள் எனப் புரியவில்லை என்கிறார்.