கடனால் விழிபிதுங்கும் தொழில் நிறுவனங்கள்.. கவலையில் வங்கிகள்.. வாராக்கடனுக்கான ஷாக் காரணங்கள்!
சென்னை: மிதமிஞ்சிய அளவு கடன் வாங்கிய தொழில் நிறுவனங்கள் கடனை அடைக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. அரசின் பொதுத்துறை வங்கிகளில் தான் இவர்கள் அதிகம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.
இதெல்லாம் மக்கள் வங்கியில் கட்டிய பணத்தை வைத்து தான் தரப்படுகிறது இதனை சரிசெய்யாவிட்டால் பாதிக்கப்பட போவதும் மக்கள் தான். சரி செய்வதற்குகூட மக்களின் வரிப்பணத்தை கொடுத்துதான் சரி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கினாலும் ஏற்றுமதி சரிவு மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் உள்நாட்டு உற்பத்தி குறைந்தது தான் முக்கிய காரணம்.
கடனை கட்ட முடியவில்லை
இதனால் தொழிலை விரிவு படுத்தும் நோக்கில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தற்போது வரை பல தொழில் நிறுவனங்கள் அதிக அளவு பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கின. ஆனால் மிதமிஞ்சிய அளவுக்கு கடனை வாங்கிய நிறுவனங்கள், கடனை அடைக்க முடியால் தவித்து வருகின்றன.
கண்ணை மூடிக்கொண்டு கடன்
எந்த ஒரு தொழில் நிறுவனமும், கையில் உள்ள பணத்தை போட்டு முதலீடு செய்வது கிடையாது. தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சியை காண்பித்து தான் கடன் வாங்கி அதனை வைத்து மேலும் மேலும் வளர்கின்றன. இதனால் நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால், அந்த நிறுவனம் எந்த வங்கியில் கடன் வாங்கியதோ அந்த வங்கியும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நிறுவனம் வளர்கிறது என்பது தெரிந்தால் கண்ணை மூடிக்கொண்டு நம் வங்கிகள் அனைத்தும்தேடி தேடி கடன் கொடுக்கின்றன.
தாராளம் காட்டும் வங்கிகள்
இதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், 35 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் தனிநபர் லோன் எடுத்து ஒருமுறை அடைத்துவிட்டால் போதும், அல்லது சரியாக கட்டிக்கொண்டிருந்தால் அவருக்கு ஒரு நிமிடத்தில் எந்த பெரிய ஆவணமும் இல்லாமல் நம்மூர் வங்கிகள் கடன் வழங்கிவிடும். அதுவும் எப்படி என்றால் அனைத்து வங்கிளுமே தலா 2 முதல் 5லட்சம் வரை தாராளமா கடன் கொடுக்க தயாராக இருக்கின்றன. இதற்கு அவருக்கு சொத்துக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சந்தையில் நன்மதிப்பு
இப்படித்தான் வளரும் நிறுவனங்களை குறிவைத்து அதிக கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. வளர்ந்த பெரும் நிறுவனங்கள் சந்தையின் உள்ள நன்மதிப்பை மட்டுமே வைத்து பல்லாயிரம் கோடிகளை கடனாக வாங்கி உள்ளன.
2லட்சம் கோடி தள்ளுபடி
நிறுவனங்களில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் இந்த கடன்களில் பல இப்போது வாராக்கடனாகி வருகிறது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு கடந்த 2018ம் ஆண்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த சிவ பிரதாப் சுக்லா மார்ச் மாதம் அளித்த பதிலில், அரசு வங்கிகளின் வாராக்கடன் ஏறக்குறைய ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடியாக அதிகரித்துவிட்டது என்று கூறினார். மற்றொரு கேள்வியில் கடந்த 2016-ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 287 கோடியை தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
கருப்பு பட்டியலில் நிறுவனங்கள்
இந்த ஆண்டு கடன் புள்ளி விவரங்கள் வெளியானால் இன்னும் அதிக அளவு வாராக்கடன் இருப்பது வெளிச்சத்துக்கு வரும். ஏனெனில் இந்தியா முழுவதுமே தொழில் நஷ்டம் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் கருப்பு பட்டியலில் சேர்ந்துள்ளன. இதனால் அந்த நிறுவனங்களால் மேலும் கடன் வாங்க முடியாமல் வளரவும் முடியாமல் மூடும் அபாயத்தில் உள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் வேலை இழந்து வருகிறார்கள்.
வங்கிகளுக்கு பிரச்சனை
சுமார் 15லட்சம் கோடி பணத்தை பெருநிறுவனங்கள் கடனாக வாங்கிவிட்டு திருப்பித்தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வருவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் முன்பு ஒரு முறை கூறியது. மேலும் மக்களின் பணம் வங்கிகளில் ரூ.127 லட்சம் கோடி இருப்பதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியிருந்தது. தற்போது வங்கிகள் வாராக்கடன் பிரச்னை அதிகரிப்பால் தொழில் மூலதனத்திற்கு அரசின் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் வங்கிகள் உள்ளன.
அரசு தரப்போகும் மக்கள் பணம்
ஏனெனில் வங்கியில் உள்ள மக்களின் டெபாசிட் பணத்தை வைத்து தான் கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. இப்போது அதில் பல கடன்கள் வராமல் போனால் அதை சரிசெய்ய அரசிடம் உள்ள மக்களின் வரிப்பணம் தான் பயன்படுத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதராமன் கடந்த வாரம் பொருளாதார சீர்திருத்தம் குறித்து பேசும் போது 70 ஆயிரம் கோடி மூலதனமாக பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு அளிக்கும் என்று கூறியுள்ளார். அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் மக்கள் பணம் தான் செலவிடப்பட உள்ளது.